Tuesday, May 10, 2005

கவிஞர் புகாரியுடன் ஒரு சந்திப்பு



எழுத்தாளர் மாலனின் திசைகள் சார்பாக கவிஞர் புகாரியை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலில் இலக்கிய விழா ஒன்று கடந்த திங்கள் கிழமையன்று (09/05/2005 ) அரங்கேறியது.

விழா ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே நான் நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன்.சற்று நேரத்தில் மாலன் தன் துணைவியாருடன் வந்தார் . விழாவுக்கு வந்திருந்தவர்களை மாலன் இன்முகத்தோடு வரவேற்றார்.

புதுவை இராஜ.தியாகராஜன் ஜிப்பா சகிதமாக அறைக்குள் நுழைந்தவுடன் மாலனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு என்னருகே அமர்ந்து கொண்டார்.

நேரம் 5.45 ஆகிவிட்டது . நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் தான் இருந்தன .நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கட்லட் , முந்திரிப்பருப்பு (நெய்விட்டு வருத்ததா ? பிரமாதம் போங்க) அல்வா ,ஐஸ்கிரீம் எல்லாம் பறிமாறப்பட்டன .

நேரம் 6 மணியை நெருங்கியவுடன் மளமளவென்று மக்கள் கூட்டம் அரங்கினுள் நுழைந்தது. நான் எதிர்பார்த்திராத பல நண்பர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள்.கவிஞர் சேவியர் மற்றும் அவருடைய மனைவியார் , ஐகாரஸ் பிரகாஸ்,கிரிதரன் , மதுரபாரதி , ஹரி கிருஷ்ணன் , சுரேஷ் கண்ணன் , சிபி வெங்கடேஷ் , அரவக்கோன் மற்றும் அவரது மனைவி கிருஷாங்கினி , வ.ஊ.சி யின் பேரன் , பத்ரி சேஷாத்ரி, சிறகு ரவிச்சந்திரன் , கவிஞர் ஜெயபாஸ்கரன் , அமிர்தம் சூர்யா,லேனா தமிழ்வாணன் மற்றும் நான் அறிந்திராத பல நண்பர்களும் கவிஞர்களும் வி்ழாவுக்கு வந்திருந்தார்கள்.

புகாரி அரங்கினுள் நுழைவதற்கு முன்பே மாலன் அவர்கள் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். கோட் சூட்டுடன் கவிஞர் புகாரி வந்திருந்தார். அவரைச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டேன் , நான் வந்தது கண்டு மகிழ்ச்சி என்று கூறினார்.நானாவது பெங்களூரில் இருந்து தான் சென்றிருந்தேன் . ஆனால் கவிஞர் சேவியரோ இந்த விழாவிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பறந்து வந்திருந்தார் .

நானும் கவிஞர் சேவியரும் , எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் கலைவிமர்சகர் இந்திரனோடு சிறிது நேரம் இலக்கியம் பேசினோம் .

0

விழா சற்று தாமதமாகத் தொடங்கியது . மேடையில் அமுதசுரபி பொறுப்பாசிரியர் அண்ணாக்கண்ணன் , கவிதாயினி வைகைச்செல்வி , கவிஞர் யுகபாரதி , கவிஞர் இந்திரன், கவிஞர் புகாரி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

0

முதலில் மாலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் .இந்த விழாவானது வழமையான சம்பிராதய முறைப்படி இல்லாமல் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று மாலன் தெரிவித்தார் . விழாவில் பேசிய யாருமே " அவர்களே இவர்களே "என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்று பார்வையாளர்களைப் கடுப்பேத்தவில்லை .

மாலன் தனது பேச்சினிடையே சுவாரஸ்யமாக வார்த்தைச் சிலம்பம் வீசினார்." என்னை புகாரி இந்த விழாவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தச் சொன்னார் , எனது தலை "மை" யை ஏற்கும் நிலையில் இருந்தாலும் , நான் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று புகாரியிடம் கூறி விட்டேன் " என்றார் மாலன் .


மேலும் " புகாரி கவிதை வேண்டிய அவசியமே இல்லை , அவர் பணிபுரியும் அலுவலகத்தில் அதிகப்படியாக ஒரு மணிநேரம் வேலை செய்தால் அதற்கேற்றார் போல ஊதியம் கிடைக்கும்.இருப்பினும் புகாரிக்கு தமிழின் பால் இருக்கும் ஆர்வமே அவரைக் கவிதை எழுதவைக்கிறது .

அவருடைய தாயார் அவரை ஒரு டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் , தன் மகன் கையில்ஒரு ஊசியை எடுக்க வேண்டும் என்று நினைத்தார், ஆனால் புகாரியோ தனது கையில் நூலை (புத்தகம்) எடுத்துக் கொண்டார் , மக்களின் நோய் தீர்க்கும் மருந்து தருவார் என எதிர்பார்த்தார் , ஆனால் அவரோ நமக்கெல்லாம் கவிவிருந்து தருகிறார் .. என்று எதுகையில் விளாசித் தள்ளினார் மாலன் .


மாலனுக்குப் புகாரி பொன்னாடை போர்த்தியவுடன் ,எனக்கு ஆடை எல்லாம் தரவேண்டாம் , இன்னும் சிலநூல்கள் (புத்தகம்) தாருங்கள் என்று மாலன் கூறியவுடன் அரங்கமே கலகலப்பானது.

மாலன் தனது வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் அமர்ந்திருந்த கவிஞர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தோடு அவர்களைப் பேச அழைத்தார்.

0

முதலில் கவிஞர் இந்திரன் பேசினார் . அறைக்குள் ஆப்பிரிக்க வானத்தைக் கொண்டு வந்த இந்திரனைஎல்லோரும் விமர்சகர் என்று சொல்கிறார்கள் . ஆமால் விமர்சகன் என்றால் மரப்பசு என்று பொருள் , மரப்பசு என்றால் சரக்கு ஒன்றும் கிடையாது என்று அர்த்தம் , ஆகையால் நான் இந்திரனைக் கவிஞர் என்றே அழைப்பேன் என்று மாலன் குறிப்பிட்டார் .

0

கவிஞர் இந்திரன் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் , இவர் எழுதியவற்றுள் திருவடிமலர்கள் , Syllables of silence , Acrylic Moon ,பசித்த தலைமுறை , அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் ,அந்நியன் , காற்றுக்குத் திசையில்லை , முகில்களின் மீது நெருப்பு,நவீனகலை ஒரு தேடல் , சத்யஜ்த் ரே சினிமாவும் கலையும் , முப்படை நகரம் ,சாம்பல் வார்த்தைகள் , கவிதை , ஓவியம் , சிற்பம் , சினிமா , மின் துகள் பரப்பு ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

கவிஞர் இந்திரன் பேசிய பொழுது புகாரி கனடாவில் இருந்தாலும் தனது ஒரத்தநாட்டை மனசுக்குள்ளேயே சுமந்து சென்றிருப்பதாகத் தெரிவித்தார் .பிறகு ஒரு குட்டிக் கதை ஒன்று கூறினார்.

ஒரு வெளிநாட்டுக் கவிஞர் (பெயர் நினைவில்லை) சூழலின் நிர்பந்தத்தில் தனது தாயாரை விட்டுவிட்டு அயல் தேசம் சென்றாராம், சில வருடங்கள் கழித்து அந்தக் கவிஞருடைய தாயார், அந்தக் கவிஞனின் நண்பர் ஒருவரை அழைத்து ,தனது மகனைப் போய்ப் பார்த்துவிட்டு வருமாறு பணித்தாளாம் , கவிஞரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய நண்பர் கவிஞனின் தாயாரிடம் , கவிஞர் நன்றாக இருப்பதாகவும் தாயாரைப் பற்றி ரொம்ப விசாரித்ததாகவும் கூறியவுடன் கவிஞரின் தாயார் , " என் மகன் என்ன மொழியில் பேசினான் ?" என்று கேட்டாராம். உடனே அவர் " கவிஞர் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறியவுடன் , கவிஞரின் தாயார் கோபமடைந்தாளாம் , " நம் தாய் மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறானா ? தாய்மொழியை மறந்தவன் தாயை மறந்தவன் என்று கூறினாளாம்.

0

அண்ணாக் கண்ணன் பேசிய பொழுது , புகாரி வலைக் குழுமங்களில் தனது பெயருக்கான விளக்கம் என்ன என்பதை இரா.ம.கியிடம் கேட்டதாகவும் , அதற்கு அவர் புகாரி என்பது தமிழ்ப்பெயரே என்று அவர் கூறியது கண்டு புகாரி மிகவும் மக்ழிச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார் .பெரும்பாலான இஸ்லாமியர்களின் பெயர் அரபு மொழி(உருது) சார்ந்தாகவே இருக்குமென்றும் , புகாரியின் பெயர் தமிழ் மரபில் இருப்பதாலேயே தமிழில் அவருக்குப் பற்று அதிகமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார் , மேலும் புகாரியின் கவிதைகளில் சந்த நயம் துள்ளி விளையாடுவதாகப் பேசிவிட்டு புகாரியின் சிலகவிதைகளில் உள்ள சொல்லாட்சியைப் புகழ்ந்து பேசினார் .

0

படித்துறை சிற்றிதழ் நடத்தி வரும் பாடலாசிரியர் யுகபாரதி ஆரம்பம் முதலே இயல்பாகப் பேசினார் ,புகாரி ஏதோ செய்யக் கூடாத காரியம் செய்துவிட்டது போலவும் எங்கே கை தட்டினால் , அவர் மேலும் பல செய்யக் கூடாத காரியங்கள் செய்துவிடுவார் போலவும் பார்வையாளர்கள்
அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறினார் , இந்த மாதிரியான இறுக்கமான சூழல் வேண்டாம் , அடிக்கடி கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டார் .

சிற்றிதழ் ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துக்கொண்டு மற்றவர்களுக்கே எதிரே ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு இலக்கியத்தில் அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை யுகபாரதி முன்வைத்தார் , அவர் பேசி முடித்தவுடன் , மாலன் , கவிஞர் யுகபாரதியும் கூடிய விரைவில் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

0

அம்மி கவிதைத் தொகுப்பு எழுதிய வைகைச் செல்வி , புகாரியின் காதல் கவிதை ஒன்றைப் படித்து விட்டு , தற்சமயம் பல பெண்கவிஞர்கள் காமத்துப்பால் கவிஞர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார் .

வைகைச்செல்வி பேசிக்கொண்டிருந்த பொழுது கவிஞர் வைரமுத்து அரங்கினுள் நுழைந்தார் . கவிஞர் புகாரி மேடையிலிருந்து இறங்கிச் சென்று கவிஞர் வைரமுத்துவை வரவேற்றார். வைகைச்செல்வி , புகாரி எழுதிய சுட்ட வீரப்பன் வேண்டுமா ? சுடாத வீரப்பன் வேண்டுமா ? என்ற கவிதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி அந்தக் கவிதையிலிருந்து ஒன்றிரண்டு வரிகளை வாசித்தார்.

0

பிறகு கவிஞர் புகாரி பேசத் தொடங்கினார் .கவிஞர் புகாரியின் குரல் ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான குரல் தான் , கனடா வானொலியில் முன்பொருமுறை ஹைக்கூ கவிதையைப் பற்றி நானும் , அவரும் ,இளந்திரையனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறோம் .

கவிஞர் புகாரி பெரும்பாலும் கவிதையிலேயே பேசினார் . கவிஞர் புகாரி தனது வாழ்வில் முன்னேறுவதற்காக தான் அடைந்த துயரங்களையும் மேற்கொண்ட சிரத்தைகளையும் ஒரு பாடல் மூலமாகவே கூறியது மிகவும் உருக்கமாக இருந்தது .

மேடையில் தனது தாயாருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்த புகாரி , பொறுப்புக்கு (மாலன்) பொன்னாடை போர்த்தினேன் , எனது இருப்புக்கு (தாயார்) பொன்னாடை போர்த்தினேன் , இப்பொழுது கவிதை நெருப்புக்கு (வைரமுத்து) பொன்னாடை போர்த்தப்போகிறேன் என்று கூறிவிட்டு வைரமுத்துவிற்குப் பொன்னாடை போர்த்தினார்.

கவிஞர் வைரமுத்து தனது ஆதர்ச (Inspiration) எழுத்தாளர் என்பதை புகாரி மேடையிலேயே தெரிவித்தார் . நேரம் 8.45 ஆகிவிட்டது ,நான் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்தேன் .

புகாரி எழுதிய 4 கவிதைத் தொகுப்புகளையும் ( வெளிச்ச அழைப்புகள் , அன்புடன் இதயம் , சரணமென்றேன் , பச்சைமிளகாய் இளவரசி ) ஒரு மேஜையில் அடுக்கி வைத்திருந்தார்கள் . அந்த 4 புத்தகங்களையும் கைப்பற்றிக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.

கவிஞர் வைரமுத்துவின் பேச்சைக் கேட்பதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

என்றும் அன்பகலா
மரவண்டு

1 comment:

Anonymous said...

//ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி, கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை//
சூப்பருங்கோ! விரிவான செய்திக்கு நன்றி கணேஷ் !

கருத்துச் சொன்னவரு: Positive RAMA