Monday, June 27, 2005

கவிஞர் ஆக்டேவியோ பாஸ்



ஆக்டேவியோ பாஸ் (Octavio Paz 1914-1998 ) என்கிற லத்தீன் அமெரிக்கக் கவிஞர் மார்ச் 31 , 1914 இல் மெக்ஸிகோ நகரத்தில் பிறந்தார் . பாஸின் தாத்தா இந்திய கருப்பொருளை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். பாஸின் தந்தை ஒரு அரசியல் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார் . தனது தாத்தாவின் சொந்த நூலகத்தில் இருந்து இலக்கிய அறிவைப் பெற்ற பாஸ் , சில இளம் கவிஞர்களுடன் சேர்ந்து தனது 17வது வயதிலேயே Barandal (Balus - trade) - 1931 என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதன் வாயிலாக தனது கவிதைகளை எழுதி வெளியிட்டார் .1933 ஆம் ஆண்டு Luna Silvestre (Forest Moon) என்னும் தனது முதல் நூலை வெளியிட்டார். சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெருடா , பாஸின் கவிதைகளைப் படித்துவிட்டு பாஸை வெகுவாக ஊக்குவித்தார். பாஸ் தனது கவிதைகளில் வார்த்தை இடமாற்ற(Anagram ) உத்தியைக் கையாண்டார்.

கவிதையின் சொற்களை
நாம் ஒரு போதும் சொல்வதில்லை
கவிதை நமக்குச் சொல்கிறது.

என்று கூறிய பாஸின் கவிதைகள் அனைத்தும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.Poemas 1935-1975 (1981) and Collected Poems, 1957-1987 (1987).

இந்தியாவிற்கான மெக்ஸிக தூதராக 1962 இல் பாஸ் நியமிக்கப்பட்டார். இந்தியாவால் மிகவும் கவரப்பட்ட பாஸ் The grammarian Monkey மற்றும் East Slope ஆகிய நூல்களை எழுதினார். இந்தியாவை Cosmic Metrix என்றழைத்தார் . In light of India என்ற கட்டுரையில் இந்தியாவைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அக்டோபர் 2, 1968 , மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிக்கு முந்தைய சில தினத்தில் , மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்த பொழுது சில மாணவர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொள்ளப்பட்டார்கள் (massacre of students at Plaza Tlateloco ). இதைக் கண்டு வேதனை அடைந்த பாஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். 1990 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப்பெற்ற பாஸ் , தனது 84 வது வயதில் காலமானார் (ஏப்ரல் 19, 1998. )

எலியட் வெயின்பெர்கர் (Eliot Weinberger) தொகுத்துள்ள ஆக்டேவியாபாஸின் Collected Poems, 1957-1987 என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் இடம்பெற்றுள்ள சில கவிதைகளைக் கள்ளழகர் என்பவர் , தமிழில் மொழிபெயர்த்து , அக்டேவியாபாஸ் கவிதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதை...

ஞானக்குளியலின் விளைவுகள்

இளம் ஹாசன்
ஒரு கிருத்தவப் பெண்ணை மணக்கும் பொருட்டு
ஞானக்குளியல் செய்விக்கப்பட்டான்

பாதிரியார் அவனுக்கு
எரிக் எனப் பெயரிட்டார்,
எதோ அவன் ஒரு ஏவுகலம்
என்பது போல

இப்பொழுது
அவனுக்கு இரண்டு பெயர்கள்
ஒரேயொரு மனைவி

ஹாசன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சிரிப்பவன் என்று பொருள் .

இந்தக் கவிதையை யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் இங்கே இடவில்லை. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நாகூர் ரூமி எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் முதல் பக்கத்தில் படித்தது ஞாபகத்திற்கு வருகிறது .

பெர்னாட்ஷா சொல்லியிருக்கிறார் ... இந்த உகலத்திலேயே தலைசிறந்த மார்க்கம் இஸ்லாம் மார்க்கம் தான் .. ஆனால் இந்த உகலத்திலேயே மிக மோசமான சமுதாயம் இஸ்லாம் தான்.. அவர் சொன்னதன் முதல் பகுதியை எந்தப் பேச்சுமின்றி முஸ்லீம்கள் அனைவரும் உடனே ஏற்றுக்கொள்வர் , இரண்டாவது பகுதியை முஸ்லீம் அல்லாதவர்கள் ஏற்றுக்கொள்வர் -
நாகூர் ரூமி


எழுத்தாளர்கள் மொழியின் பாதுகாவலர்கள் - ஆக்டேவியோ பாஸ்

குறிப்பு நூல்கள்

1) காலச்சுவடு இதழ்
2) ஆக்டேவியா பாஸ் கதைகள் - கள்ளழகர்
3) இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி
4) லயம் சிற்றிதழ்

மேலும் சில இணைய தளங்கள் ...

Thursday, June 23, 2005

என் இனிய ஹைக்கூவே ....

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று ஹைக்கூ கவிதைகள் என இந்த மூன்று கவிதைகளைச் சொல்வேன் .






ஹைக்கூ கவிதைகள் என்றால் எனக்கு உயிர். தேடித் தேடிப் படிப்பேன் . படித்த கவிதைகளை நண்பர்களிடம் கூறி மகிழ்வேன். இதனால் நண்பர்கள் சிலர் என்னை ஹைக்கூ- கணேஷ் என்றழைக்கத் தொடங்கினார்கள் . சென்னையில் வேலை கிடைத்தவுடன் , இணையத்திலும் ஹைக்கூவைப் பற்றி எழுத ஆரம்பித்தேன் . நண்பர் சோகம் சஃபீக்கின் துணையுடன் "தமிழ் ஹைக்கூ" என்றொரு மின்-குழுமத்தை நடத்தி வந்தேன். பிறகு நண்பர் கணேஷ் சந்திரா அவர்கள் நடத்தி வரும் தழிழ் ஓவியம் இணைய தளத்தில் ஹைக்கூவைப் பற்றித் தொடர் கட்டுரை ஒன்று எழுதினேன். சமீபகாலமாக ஹைக்கூ கவிதைகள் படிப்பது குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன் . கடந்த மாதம் கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் அவர்கள் ஹைக்கூ குறும்படம் ஒன்றைத் தயாரித்து அதைச் சென்னையில் திரையிட்டிருக்கிறார். நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பியிருந்தார்கள் . ஆனால் என்னால் செல்ல முடியவில்லை.

0


நான் இதுவரை ஹைக்கூ கவிதையைப் பற்றி பல்வேறு இடங்களில் எழுதியவற்றை இங்கே தொகுத்தளிக்கிறேன். பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.


1. ஹைக்கூவின் தோற்றம்


ஹைக்கூ என்ற மூன்று வரிக் குறுங்கவிதை கருக்கொண்டது ஜப்பானிய மண்ணில் தான். சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மொழிகள் இரண்டு அதில் ஒன்று நமது தமிழ், மற்றொன்று ப்ரெஞ்ச். தமிழ் இலக்கிய வரலாற்றை சங்கத்தின் அடிப்படையில் முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பிரிக்கிறார்கள். ஆனால் ஜப்பானிய இலக்கிய வரலாற்றை அதன் தலைநகர் மாற்றத்தின் அடிப்படையில் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

பிரிவு 1 : நாராக் காலம் (கி.பி 700 முதல் 794 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற கவிதை வடிவம் வழக்கத்தில் இருந்தது. அடுத்தடுத்த அடிகள் 5,7 என்ற அசை அமைப்பிலும், கடைசி இரண்டு அடிகள் 7,7 என்ற அசை அமைப்பிலும் இருந்தது சோக்கா கவிதை. சோக்கா கவிதைக்கு வரி வரம்பு எதுவும் கிடையாது. மக்கள் இந்தக் கவிதையை விரும்பி ரசிக்கவில்லை.

பிரிவு 2 : ஹூயன் காலம் (கி.பி 794 முதல் 1192 வரை)

இக்காலத்தில் சோக்கா என்ற நீண்ட கவிதை தன்கா என்ற 5 வரிப் பாடலாகசுருங்கியுள்ளது. 5,7,57,7 என்ற அசை அமைப்பில் அமைந்த ஐந்து வரிப் பாடலே தன்கா கவிதை.

பிரிவு 3 : காமெக்கூரா காலம் (கி.பி 1192 முதல் 1332 வரை)

இக்காலத்தில் ஜாக்கின்சூ என்ற செய்யுள் தொகை வடிவம் பிறந்திருக்கிறது கடுமையான இலக்கணங்கள். இந்தக் கவிதையும் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.

பிரிவு 4 : நான்போக்குச்சாக் காலம் (கி.பி 1332 முதல் 1603 வரை)

இக்காலத்தில் "நோஹ்" என்ற இசை நாடக சமய சமுதாயக் கவிதைகள்வெளிவந்தன.

பிரிவு 5 : எடோ காலம் (கி.பி 1603 முதல் 1863 வரை)

இக்காலத்தில்தான் சீன ஜப்பான் மொழிக் கலவையாக ஹைக்கூ கவிதை தோன்றியது. மூன்றே மூன்று அடிகள் 5,7,5 என்ற அசை அமைப்பில் அமைந்தது.

பிரிவு 6 : டோக்கியோ காலம் (கி.பி 1863 க்கு அடுத்தது)

ஹைக்கூ கவிதை பரவலாக அறியப்பட்டு ப்ரெஞ்ச், ஆங்கிலம் என கொடிகட்டிப் பறந்து தமிழுக்கும் வந்துவிட்டது.

2. ஹைக்கூ பெயர்க் காரணம்

ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர். தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி, கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை. பெண்கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று பொருள் தருகிறார்.

3. ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை

ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது . தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் பொருந்தி வரும் விதி!) .ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத் தூற எறிந்து விட்டார்கள்.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் , தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த ஹைக்கூ கவிதைகளை காற்றின் கைகள் என்ற ஹைக்கூ நூலில் படைத்திருக்கிறார்.

4. ஜென் பெயர்க்காரணம்

புத்த மதத்தின் கிளைப் பிரிவான ஜென் தத்துவத்தைப் பரப்புவதற்கு ஒரு நல்ல ஊடகமாக ஹைக்கூ கவிதையானது பயன்படுத்தப்பட்டது. "த்யான்" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆழ் நிலை தியானம் என்று பொருள். இந்த "த்யான்" என்ற ஆன்மீக விதையை தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் (Bodhi Daruma) என்பவர் சீனாவிற்கு எடுத்துச் சென்று பெளத்த மதத்தைப் பரப்பினார்.சீனாவில் இந்த தியான் என்ற பதம் சான் என்று மருவிற்று. சீனாவில் பெளத்த மதத்திற்கு ஆரம்பகாலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் காலப்போக்கில் பெளத்த மதத்திற்கு சீனாவில் எதிர்ப்பலை கிளம்பியது . உடனே போதிதர்மர் இந்த சான் என்ற ஆன்மீக விதையை எடுத்துக் கொண்டு ஜப்பானுக்குச் சென்றார். ஜப்பானில் சான் என்ற பதம் ஜென் என்று மருவிற்று. ஜப்பானிய மக்களிடையே பெளத்த மத ஜென் தத்துவத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜென் என்பது ஒரு சூட்சுமமான விடயம் . யாராவது ஒருவர் ஜென் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தால் அது பொய்யாகத் தான் இருக்கும் ."Zen Teaches Nothing" ஜென் சொல்லித் தருவது எதுவுமில்லை அப்படியென்றால் ஜென் என்பதை எப்படி உணர்வது ? இதற்கு ஒரு சிறிய கதை உண்டு.


ஒரு பெரிய கடலில் மீன்கள் உலவிக் கொண்டு இருந்தன . ஒரு சிறிய மீன் தனது தாய் மீனிடம் "அம்மா அம்மா கடல் என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன? அது எங்கே இருக்கிறது ? " என்று கேட்டது.


உடனே தாய் மீன் "கடல் என்பது உனக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிறது" என்று பதிலளித்தது .

அந்தக் குட்டி மீன் "என்னால் அதைக் காணமுடியவில்லையே அதை உணர முடியவில்லையே என்று கேட்டது .

உடனே தாய் மீன் , "நீ பிறந்தது இங்கே தான். ஒரு வேளை உன் இறப்பும் இங்கேயே நிச்சயிக்கப்பட்டிருக்கலாம் அதனால் தான் உன்னால் உணரமுடியவில்லை " என்று பதிலளித்தது.

இதைப் போல் தான் மனிதர்களாகிய நாமும் ஜென் என்ற தத்துவக் கடலுக்குள்தான் இருக்கிறோம். ஆனால் அதை உணர முடியாது.


5. ஹைக்கூ கவிதையின் வளர்ச்சி


ஜப்பானிய கவிஞர்கள் மோரிடேகே (1473-1549) மற்றும் சோகன் (1465-1553)ஆகியோர் ஹைக்கூ கவிதையின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்கள்.

உதிர்ந்த மலர் / கிளைக்குத் திரும்புகிறதோ ? / வண்ணத்துப் பூச்சி (மோரிடேகே)

நிலவிற்கு ஒரு / கைப்பிடி வைத்தால் / எத்துனை அழகான கைவிசிறி (சோகன்)

ஹைக்கூ முன்னோடிகளை அடுத்து ஹைக்கூ நால்வர்கள் தோன்றினார்கள் .

1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)

2. யோசா பூசன் (1716-1784)

3. இஸ்ஸா (1763-1827)

4. ஷிகி (1867-1902)

1. மட்சுவோ பாஸோ (1644 - 1694)


ஹைக்கூவின் கம்பர் என்றழைக்கப் படும் இவர் அருமையான ரெங்கா கவிஞர் ஆவார்.பாஸோ என்றால் வாழை மரம் என்று பொருள் . இவர் தங்கியிருந்த குடிசை அருகே வாழைமரம் இருந்ததால் இவர் பாஸோ என்றழைக்கப் பட்டார் . பாஸோ தன் கவிதை சீடர்களுக்கு நிறைய அறிவுரைகள் கூறுவார்.
"எழுதும் பொழுது உனக்கும் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது , உன் உள்மனதை நேரடியாகப் பேசு , எண்ணங்களைக் கலையவிடாதே , நேரடியாகச் சொல் " இது தான் ஹைக்கூ சீடர்களுக்கு பாஸோ கூறும் அறிவுரை .

பாஸோ சாமுராய் என்ற போர் வீரன் இனத்தைச் சார்ந்தவர் . இந்த இனத்தவர்கள் தன் நாட்டு மன்னருக்காக உயிரைக் கூட இழப்பதற்குத் தயாராக இருப்பார்களாம் .ஒரு வேளை மட்டுமே உண்பார்களாம் . தனது சொந்த நாட்டிற்கே துரோகம் செய்ய நேர்ந்தாலோ , எதிரியிடம் சிக்கிக் கொண்டாலோ , தங்களது போர் வாளை எடுத்துத் தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைவார்களாம் .இந்த வீர மரணத்திற்கு ஹராஹிரி (Harakiri) என்று பெயர் .

ஜப்பானியர்கள் தவளையைப் பாட்டுப் பறவை என்று செல்லமாக அழைக்கிறார்கள் .பாஸோவின் கவிதைகளில் தவளை தான் கதாநாயகன்.

பழைய குளம் / தவளை குதிக்கையில் / தண்ணீரில் சப்தம்
0
எந்தப் பூ மரத்திலிருந்தோ ? /எனக்குத் தெரியவில்லை /ஆனால் ஆஹா நறுமணம்
0
மேகம் சில நேரங்களில் / நிலவை ரசிப்பவனுக்கு /ஓய்வு தருகிறது

2. யோஸா பூசன் (1716-1784)


சீன ஓவியத்தை ஜப்பானுக்கு அறிமுகப் படுத்தியவர் இவரே. தனது தூரிகையால் பாஸோவின் கவிதைகளை மெருகூட்டினார் .

குழந்தையின் முகத்தில் / மகிழ்ச்சி / கொசு வலைக்குள் !
0
ஆலய மணியின் மீது / ஓய்ந்து உறங்குகிறது /வண்ணத்துப் பூச்சி !
0
பனி வீழ்ந்த முள் செடி / அற்புத அழகு / ஒவ்வொரு முள்ளிலும் துளி

3. இஸ்ஸா (1763-1827)

இவர் கிராமப் புறத்தில் பிறந்ததால் இவரை நாட்டுப் புறப் பூசணி என்று செல்லமாக அழைப்பார்கள் . இவரது வாழ்க்கை இன்னல்கள் நிறைந்தது. இளம் வயதிலேயே தாயாரை இழந்து , மாற்றாந்தாயின் கொடுமைக்கு உட்பட்டு வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டார் சிறு சிறு பூட்சிகளின் பால் மிகுந்த பரிவு காட்டினார்.


0
அரிசியைத் தூவினேன் / இதுவும் பாவச் செயலே / கோழிகளுக்குள் சண்டை
0
பெட்டிக்கு வந்த பின் / எல்லாக் காய்களும் சமம்தான் /சதுரங்கக் காய்கள்
0
பனியை உருக்கக் கூட /காசு தேவை / நகரத்து வாழ்க்கை

4. ஷிகி (1867 - 1902)


இவர் ஹைக்கூ நால்வரில் இறுதியாவனவர் . இவர் ஹைக்கூவின் புரட்சிக்குயில் என்றழைக்கப்படுகிறார். பாஸோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தமான (Prasoic) கவிதைகள் என்று சாடினார் இவர்.

சிதைந்த மாளிகை/தளிர் விடும் மரம்/போரின் முடிவில்

வெப்பக் காற்று/ப்ளம் மலர்கள் உதிரும்/கல்லின் மீது

தத்தித் தத்தி நடக்கும் சிட்டுக்குருவி /தாழ்வார ஓரங்கள் /ஈரப் பாதங்கள்


6) ஹைக்கூ அயல் நாடுகளில் பரவியது எப்படி . ?


மேற்கத்திய ஹைக்கூ கவிதையின் வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் என சேம்பர்லின், R.H பிளித், ஹெரால்ட் ஹெண்டெர்சன், கென்னத் யசூதா, எஸ்ட்ரா பவுண்ட் ஆகியோரைக் குறிப்ப்பிடலாம். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !என்று சொன்ன நம் பாட்டுப் பாட்டன் பாரதி தான் ஹைக்கூ விதையை தமிழ் மண்ணில் தூவினார்.

ஜப்பானியக் கவிதை (பாரதியார் கட்டுரை) 16-10-1916 (சுதேசமித்திரன் பத்திரிக்கை)


சமீபத்தில் “மார்டன் ரிவியூ” என்ற கல்கத்தா பத்திரிக்கையில் “உயானோ நோக்குச்சி” என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதி இருந்தார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால் “மேற்குக் கவிதையில் சொல் மிகுதி எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல் சொல்லும் வழக்கம் கவிதையிலே இல்லை. எதுகைச் சத்தம் முதலியவற்றைக் கருதியும் சோம்பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும் பல சொற்களைச் சேர்த்து வெறுமனே பாட்டை அது போகிற வழியெல்லாம் வளர்த்துக் கொண்டு போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அதிகம் இருக்கிறது. தம்முடைய மனதிலுள்ள கருத்தை வெளியிடுவதில் மேற்குப் புலவர்கள் கதைகள் எழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள். ஜப்பானில் அப்படியில்லை வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது." கூடை கூடையாய் பாட்டெழுதி அச்சிட வேண்டும் " என்று ஒரே ஆவலுடன் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதையெழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையை கவிதையாகச் செய்தோன். அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம் மலர்களின் பேச்சு - இவற்றிலே ஈடுபட்டுப் போய் இயற்கையுடன் ஒன்றாக வாழ்பவனே கவி.
கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே ஒரு சீடன் "பாஷோ மட்சுவோ என்னும் புலவரிடம் மூன்று ரியோ [அதாவது ஏற்க்குறைய முப்பது வராகன்] காணிக்கையாகக் கொடுத்தானாம் . இவர் ஒரு நாளுமில்லாத புதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தொல்லையாதலால் "வேண்டியதில்லை" என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். இவருக்கு காகா [kaga] என்ற ஊரில் ஹொகுஷி என்றொரு மாணாக்கர் இருந்தார். இந்த ஹொகுசியின் வீடு தீப் பட்டெரிந்து போய்விட்டது . அந்தச் செய்தியை ஹொகுஷிப் புலவர் தமது குருவாகிய பாஸோ மட்சுவோ புலவருக்குப் பின்வரும் பாட்டில் எழுதி அனுப்பினார் .


"தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !"


மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும் பொழுது எத்தனை அமைதியுடன் இருக்கிறதோ அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். வீடு தீப்பட்டெரிந்தது ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போக வில்லையென்ற விஷயத்தை ஹொகுஷி இந்தப் பாடலின் வழியாகத் தெரிவித்தார். "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்" ஜப்பானியக் கவிதையின் விஷேசத் தன்மையென்று நோக்குச்சிப் புலவர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது."கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" . கிழக்குத் திசையின் கவிதையிலே இவ்விதமான ரசம் அதிகந்தான் . தமிழ் நாட்டில் முற்காலத்தில் இது மிகவும் மதிப்பெய்தி நின்றது .ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே போய் விட்டால் நல்லதன்று ஜப்பானிலே எல்லாப் பாடலும் "ஹொகுசி" பாட்டன்று. "நோக்குச்சி" சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.

" எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப் பொருள் காண்பதறிவு "

000000000000000000000000000000000000000000000000000000000000000000000
இந்தக் கட்டுரைதான் ஹைக்கூ குறித்தான அறிமுகத்தை தமிழுக்கு முதன் முதலில் தந்தது.
ஆனால் இந்தக் கட்டுரையில் சில பிழைகள் இருக்கின்றன.


பிழை 1 : பாஷோவின் (Basho Matsuo) மாணாக்கர் ஹொகுசி என்று குறிப்பிட்டிருக்கிறார் பாரதி. பாஷோவின் வாழ்க்கை 1644 க்கும் 1694 க்கும் இடைப்பட்டது ஹொகுசியின் வாழ்க்கை 1760 க்கும் 1849 க்கும் இடைப்பட்டது . இப்படியிருக்க ஹொகுசி (Katsushika Hokusai) எப்படி பாஷோவின் மாணாக்கராக இருந்திருக்க சாத்தியம் ?


பிழை 2 : ஹொகுசியைப் புலவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் ஹொகுசி ஒரு தலைசிறந்த ஓவியர் . ஆறுவயதிலேயே தூரிகை பிடிக்கத் தொடங்கியவர். "எனது ஒவ்வொரு புள்ளியும் இயற்கையின் ஒரு வீரியமுள்ள நுண்மையான கதிர் வீச்சு" என்று குரல் கொடுத்தவர் .


பிழை 3 : "தீப்பட்டெரிந்தது , வீழு மலரின் அமைதியென்னே !" it has burned down ! how serene the flowers in their falling இந்தப் பாடலைப் பாடியது ஹொகுஷி என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பாடலை உண்மையில் எழுதியது யார் என்று தெரியாது. இந்தக் கவிதையை யோனா நோக்குச்சி (Yone Noguchi) எழுதிய ஜப்பானியக் கவிதையின் உயிர் (The Sprit of Japanese Poems p.27) என்ற நூலில் மேற்க் கோள்காட்டி எழுதப் பட்டது. மொழி பெயர்ப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்கலாம் , அல்லது நோக்குச்சி புலவர் தவறாக எழுதி இருக்கலாம்.

0

முண்டாசுக் கவிஞன் பாரதி ஹைக்கூ கவிதையை அறிமுகம் செய்த பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகே தமிழ்க் கவிஞர்களுக்கு ஹைக்கூவை பற்றித் தெரிய வந்தது.

புதுக் கவிதையாளர்களே உஷார் ! வருகிறது ஹைக்கூ கவிதை என்ற எச்சரிக்கையுடன் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டது. ஒளவைப் பாட்டி எழுதிய ஒற்றை வரி ஆத்திச்சூடி இருக்கிறது திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இருக்கிறது. இதில் இல்லாதது என்ன இருந்துவிடப் போகிறது என்ற ஒரு கேள்வியை புதுக்கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். இதற்கு ஹைக்கூ கவிஞர் அன்பாதவன் " திருக்குறளும், ஆத்திசூடியும் இதைச் செய், அதைச் செய்யாதே என்று சிக்னல் வாசங்களைப் போல் ஒரு அறிவுறுத்தும் பாங்கில் தான்இருக்கிறது. கவிதை நடையில் அவைகள் இல்லை.ஆனால் ஹைக்கூ கவிதை கவிதை நடையில் வாசகனை அறிவுறுத்துகிறது " என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ஹைக்கூ கவிதையில் உணர்ச்சி இல்லை, தமிழில் இதுவரை ஒரு ஹைக்கூ கவிதை கூட எழுதப்படவில்லை ,ஹைக்கூ என்பது புதுக்கவிதையின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பெருச்சாளி ,ஜப்பானிய கவிதைகளில் இருக்கும் ஜென் தத்துவங்கள் தமிழ்க் கவிதைகளில் இல்லை , இப்படிப் பலவாறான குற்றச் சாட்டுகளை புதுக் கவிதையாளர்கள் முன்வைத்தார்கள். எனினும் ஒரு சிலர் ஹைக்கூ கவிதையை ஆதரித்தே வந்தார்கள்.


சுஜாதா



ஜனவரி 1966 இல் கணையாழி இதழில் சில ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து ஜுனியர் விகடன் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஹைக்கூ குறித்து கட்டுரை வரைந்தார். ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் என்ற நுலை வெளியிட்டார். இந்த நூலில் ஹைக்கூ எழுதுவதற்கான சில வரைமுறைகளை மிகவும் எளிமையாக எடுத்துக் காட்டுடன் விளக்கியுள்ளார்.ஹைக்கூ கவிதையானது புரிதல் இல்லாமல் எழுதப்படுவதைக் கண்டு " ஹைக்கூ என்றொரு மூன்று வரி பாவச்செயல் " என்று சுஜாதா சமீபத்தில் ஆனந்தவிகடனில் எழுதியிருந்தார்.


கவிக்கோ அப்துல்ரகுமான்



பால்வீதி என்னும் கவிதைத் தொகுப்பில் சிந்தர் என்ற தலைப்பில் ஐந்து ஹைக்கூ கவிதைகளைத் தமிழில் எழுதினார். இதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ கவிதைகள் ஆகும் எண்பதுகளின் துவக்கத்தில் பத்திரிக்கை மூலமாகவும் இலக்கிய கூட்டங்களிலும் ஹைக்கூ பிரச்சாரம் செய்தார். 1984 ஆம் அண்டு ஜூனியர் விகடனில் மின்மினிகள் என்ற தலைப்பில் ஹைக்கூவைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை வரைந்தார் . கவிக்கோ அப்துல் ரகுமான் உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் சில ஆங்கில கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். பிறகு இவரது உதவியுடன் டாகடர் லீலாவதி அவர்கள் இதுதான் ஹைக்கூ என்ற நூலை வெளியிட்டார். இது ஆங்கில கவிஞர் R.H. பிளித் அவர்கள் எழுதிய நூலின் தமிழாக்கம் ஆகும்.


தமிழ் ஹைக்கூ நூல்கள்



தமிழில் முதல் புத்தகத்தை அமுதபாரதி வெளியிட்டாரா ? இல்லை அறிவுமதி வெளியிட்டாரா ?என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது . பரவலான மக்களின் கருத்துப் படி ஓவியக் கவிஞர் அமுத பாரதி அவர்களே புள்ளிப் பூக்கள் என்ற நூலை முதன் முதலில் வெளியிட்டார். (ஆகஸ்ட் - 1984) , பாடலாசிரியர் அறிவுமதி அவர்களை ஹைக்கூவின் சிறிய வடிவம் பெரிதும் கவர்ந்தது. அவர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புல்லின் நுனியில் பனித்துளி என்ற நூலை வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து சில நாவல் மற்றும் வாராந்திரி பத்திரிக்கைகள் ஹைக்கூ கவிதைகளை வெளியிடத் தொடங்கின. கவிஞர் தமிழ் நாடன் ஜப்பானியக் கவிதை என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். பெண்கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவைப் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். கவிஞர் இறையன்பு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன் மறைபொருளை அழகாய் விளக்கி "முகத்தில் தெளித்த சாரல்" என்னும் நூலை வெளியிட்டார். கவிஞர் செல்லம்மாள் கண்ணன் அவர்கள் தமிழ் ஹைக்கூவில் மொழி வீச்சு , ஹைக்கூ மனோபாவம் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார். இதுகாறும் தமிழில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஹைக்கூ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. சிறிது காலத்திற்கு முன்பு குமுதம் இதழில் ஹைக்கூ கவிதைகள் பிரசுரித்து வந்தார்கள். நான் அறிந்த வரையில் ( சிற்றிதழ்கள் தவிர்த்து ) பாக்யா வார இதழில் மட்டுமே தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளைப் பிரசுரித்து வருகிறார்கள் .

கடந்த வார பாக்யாவில் படித்த ஹைக்கூ ஒன்று

குளியல் அறை / ஆடை களையும் / புது சோப்பு !

0

குறிப்பு நூல்கள்


1) என்னுள் யார் யாரோ - சுப்ரபாரதிமணியன்

2) ஹைக்கூ கவிதைகள் - நிர்மலா சுரேஷ்

3) ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் - சுஜாதா

4) இதுதான் ஹைக்கூ - லீலாவதி

5) பாரதியார் கட்டுரைகள் தொகுப்பு

6) ஜப்பானியக்கவிதை - தமிழ்நாடன்

7) புல்லின் மேலே பனித்துளியாயிரு - ஓஷோ

மேலும் சில புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள்

Tuesday, June 21, 2005

சில துணுக்குச் செய்திகள்

அன்புள்ள நண்பர்களுக்கு

நான் யாகூ குழுமங்களில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

0

சமீபத்தில் ஒரு நாள் திருவள்ளுவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது " என்ன ஐயா , இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீரே ? "என்று கேட்டேன்.

அவர் அப்போது நூல் பஞ்சம் காரணமாக கைத்தறியைச் சும்மா போட்டுவிட்டு ,சத்தியாகிரகம் செய்யலாமா ? இல்லை மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி காட்டலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆகையால் நான் கூறியதற்குத் தவறாகப் பொருள் செய்து கொண்டு, "சேச்சே, கல்லைத் தூக்கிப் போடுகிறதாவது , அது யார் செய்கிற வேலை ? மந்திரிகள் மீது கல்லைத் தூக்கிப் போடுவது என்றால் அப்புறம் நாட்டிலே இருக்கும் பஞ்சம் போதாதென்று , கல்லுக்கும் பஞ்சம் வந்துவிடுமே ? " என்றார்.


"ஐயையோ அப்படி ஒன்றும் சொல்லவில்லையே , என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீர்களே என்றல்லவா சொன்னேன் "

அடடா , கல்லுக்குக் காயம் பட்டுவிட்டதா ? என்றார் திருவள்ளுவர்.

இல்லை, இல்லை , உம்முடைய குறள் ஒன்றைச் சொல்லவந்தேன்.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "

என்பதாக ஒரு குறள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா ? அதைத் தான் குறிப்பிட்டேன்.ஒருவன் தோன்றும் போதே எப்படி ஐயா புகழோடு தோன்ற முடியும் ? சீசர் என்ன ,நெப்போலியன் என்ன, ஹிட்லர் என்ன , மக் ஆர்தர் என்ன இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட பிறந்து , பிறகு தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து , அப்புறம் தானே வேட்டை நாய்களாகியிருக்கிறார்கள் . பிறக்கும் போதே புகழோடு தோன்றிய ஒரே ஒருவரைப் பற்றித் தான் காவிய இதிகாசங்களிலே கூட கேள்விப்பட்டிருக்கிறோம் . துரியோதனன் பிறக்கும் போது பதினாறாயிரம் நரிகள் ஏக காலத்தில் சுருதி பேதம் செய்து ராகமாலிகை எல்லாம் பாடினவாம் ! துரியோதனனைப் போல் எல்லோரும் எப்படிப் பிறக்க முடியும் ? தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம் ? தோன்றாமல் இருப்பது நம்முடைய வசத்தில் இருக்கிறதா ? " என்று என்று சராமாரியாகப் பொழிந்தேன் . வள்ளுவர் திக்குமுக்காடிப் போனார்.


தகவல்: கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்

000000000000000000000000000000000000000000000000

மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய தலைசிறந்த உணர்ச்சிகளுள் தலை சிறந்தது காதல்.வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை அனுபவித்தவர்கள் இனிய சுபாவமும் , தாராள மனமும் கொண்டவர்களாயிருப்பார்கள். அந்த உணர்ச்சியை அனுபவித்து அறியாதவர்களோ அசூசையும் துவேஷமும் பொங்கும் உள்ளத்தினராய் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார்கள் .
காதலில் ஒரே ஒரு குறை உண்டு . அதில் தேக தத்துவமும் கலந்திருக்கும் காரணத்தினால் அதுநெடுங்காலம் நீடித்து நிற்பதில்லை.நாளடைவில் அதனுடைய வலிமை குன்றி விடுகிறது .அதற்குப் பிறகும் மணவாழ்க்கை சந்தோசமாய் நடக்க வேண்டுமானால் இன்னும் சில நிபந்தனைகளும் நிறைவேற வேண்டும்.
புருஷனும் மனைவியும் ஏறக்குறைய ஒத்த அறிவு நிலையில் இருக்க வேண்டும் . புருஷன் கம்பனையும் காளிதாசனையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது , மனைவி அடுத்த வீட்டுக்காரியின் காதுத் தோட்டையும் கைவளையலையும் ஆராய்ந்து கொண்டிருப்பவளாய் இருந்தால் அவர்களுடைய இல்வாழ்க்கை லட்சிய இல்வாழ்க்கையாக முடியாது .

தகவல்: கல்கி கட்டுரைகள்

0000000000000000000000000000000000000000000000000000000

ராஜாஜி அவர்கள் சேலத்தில் வக்கீலாகப் பணிபுரிந்த பொழுது ,தனது வேலைக்காரர் ஒருவரை அழைத்து , ஒரு தபால் உறையில் (Postal Cover) தபால் தலை (Stamp) ஒன்றை ஒட்டி எடுத்து வருமாறு கூறினாராம் .
சிறிது நேரத்தில் அந்த வேலைக்காரர் , தபால் தலை ஒன்றை ஒட்டி ராஜாஜியிடம் கொடுத்தாராம்.அந்த தபால் உறையை வாங்கிப் பார்த்த ராஜாஜி , வேலைக்காரரிடம் "நாங்கள் பிரிட்டிஷ் மன்னனை கவிழ்ப்பதற்காக எவ்வளவோ பாடுபடுகிறோம்.ஆனால் நீ அவரை ஒரு நிமிடத்தில் கவிழ்த்துவிட்டாயே .. ! " என்று கூறி , வாய்விட்டுச் சிரித்தாராம் .

அந்த வேலைக்காரர் பிரிட்டிஷ் மன்னனின் உருவம் பொதித்த தபால் தலையை , தலைகீழாக(Upside down) ஒட்டியிருந்தாராம் .

தகவல் : உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள் - பூவை.எஸ்.ஆறுமுகம்

000000000000000000000000000000000000000000000000000000

இலக்கிய கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் .
முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து " கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை " என்று கேட்டாராம்.
உடனே கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான் ! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .


(தகவல் : கேள்விகளும் உங்கள் பாக்யராஜின் பதில்களும் : பாகம் 2)

00000000000000000000000000000000000000000000000000000

ராயர்காபிகிளப்பில் வால்டேர் குறித்தான இழையில் நான் அனுப்பிய மடல்..

அன்புள்ள பாலாஜி மற்றும் இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு ,

வால்டேர் குறித்தான தங்களின் கடிதங்கள் பல்வேறு விடயங்களைத் தாங்கி வந்துள்ளன.
மிக்க நன்றி .


வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.- பாஸ்டன் பாலாஜி

சிந்தனைச் சிற்பி சி.பி . சிற்றரசு அவர்கள் எழுதிய உலகைத் திருத்திய உத்தமர்கள் என்ற புத்தகத்தில் வால்டேரைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை இருக்கிறது .நான் அந்தக் கட்டுரையிலிருந்து உள்வாங்கிய சில செய்திகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஒரு குட்டித் துணுக்கு சொல்லிவிடுகிறேன் .சாக்ரடீஸின் நண்பர் ஒருவர், சாக்ரடீஸிடம் " உன்னிடம் ஒரு செய்தி கூறவேண்டும் " என்றாராம் . உடனே சாக்ரடீஸ் " நீ என்னிடம் அந்த செய்தியையைக் கூறுவதற்கு முன் அதை வாய்மை ,நன்மை , இனிமை என்னும் மூன்று சல்லடைகளால் சலித்துவிட்டுப் பிறகு கூறு" என்றாராம் .உடனே அவருடைய நண்பர் " அம் மூன்று சல்லடைகளால் சலித்தால் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை " என்றாராம் . நான் கூறப் போகும் செய்திகள் சல்லடைகளில் சலித்ததோ , இல்லை சலிக்காததோ ... ஆனால் படிக்கப் போகின்றஉங்களுக்கு சலிக்காது :-) என்ற நம்பிக்கையில் தட்டிவிடுகிறேன் . கோர்வையாக இருக்கவேண்டும் என்பதற்காக, கட்டுரையின் சில வரிகளை நீக்கியும், கொஞ்சம் மாற்றியும் ,இடைச்செருகலாய் எனது வரிகள் ஒன்றிரண்டைச் சேர்த்தும் இங்கே இடுகிறேன் .

0
வால்டேர் பிறந்தவுடன்(21-11-1694) மிகவும் மெலிந்து காணப்பட்டார் ,அவர் ஒரு

நாளைக்குமேல் உயிர் வாழ மாட்டார் என்று சிலர் கூறினார்கள் .ஆனால் 84ஆண்டுகள் இந்தப் புவியில் வாழ்ந்தார் (1694 - 1778)

வால்டேரின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் .....

ஆர்மண்ட் (Armand) என்பவர் வால்டேரின் அண்ணன் ஆவார் , அவர் ஜேன்சனிசம் என்ற மதசீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து அதன் கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார்." என்ன தொழில் செய்யப் போகிறாய் ? " என்று கேட்ட தந்தையிடம் , இலக்கிய தொழில்செய்யப் போகிறேன் " என்று கூறியிருக்கிறார் வால்டேர் . வால்டேரின் தந்தைக்கு தன் மகன்களின் போக்கு பிடிக்கவில்லை , "எனக்கு இரண்டு முட்டாள்கள் பிறந்திருக்கிறார்கள், ஒருவன் வசன முட்டாள் (ஆர்மண்ட்), மற்றொருவன் கவிதை முட்டாள் (வால்டேர்) , அவர்களை எப்படியாவது திருத்துங்களேன் "என்று தன் நண்பர்களிடம் சதா புலம்பிக் கொண்டேயிருப்பாராம் . கொள்கைவாதிகளைக் காட்டிலும் காரிய வாதிகளே சிறந்தவர்கள் என்று அவர் கொண்டிருந்த கொள்கையை தன் இரு மகன்களும் சேர்ந்து தவிடுபொடியாக்குவதை இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
நுண்கலையில் (Fine Arts) கைதேர்ந்த நினாந்தி எல்வென்கொல் என்பவர் ,வால்டேருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று உணர்ந்து , அவருக்குக் கல்வியும் போதித்து , சாகும் போது தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொள்வதற்காக 2000 பிராங்குகளை வால்டேருக்கு எழுதி வைத்தார் .
பாரீஸைத் தலை நகரமாகக் கொண்ட ப்ரான்ஸை ஆண்ட மன்னனை , அவனுடைய மதமும் ஆண்டு கொண்டிருந்தது . பதினான்காம் லூயி இறந்து பதினைந்தாம் லூயி பட்டத்திற்கு வந்த நேரம்.அவனுக்குத் தக்க வயது வராத காரணத்தினால் ஒரு மடையனைக் கார்டியனாக்கி இருந்தார்கள் ; ஊரெல்லாம் சிரித்தது , அவன் அரசனுக்குத் தெரியாமல் லாயத்திலிருந்த குதிரைகளை விற்றுவிட்டான்.இதையறிந்த வால்டேர் கிண்டலாக " அரச சபையிலே அன்றாடம் கூடிக் கலையும் கழுதைகளிலே பாதியை விற்றிருந்தால் கூட எவ்வளவோ கண்ணியமாகவும், மேலாகவும் இருந்திருக்கும் " என்று சொன்னார் . இதைக் கேட்ட கார்டியன் வால்டேரை பாஸ்டிலி சிறையிலடைத்தான் .

"உலகத்தில் மனிதர்கள் சிரிக்கத் தெரியாமலும் , பிறரை சிரிக்கவைக்கத் தெரியாமலும் இருந்தால் பாதிப் பேர் தூக்குப் போட்டுக் கொண்டு மாண்டு போவார்கள் "என்கிறார் வால்டேர் ஓரிடத்தில்.
வால்டேருடைய நண்பர்களின் வற்புறுத்தலாலோ,கார்டியனின் மனமாற்றத்தாலோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் வால்டேர் ,சிறையை விட்டு வெளியே வந்தவுடன் துன்ப இயல் நாடகம் ஒன்றையும் , ஒடிப்பி(oedipe) என்ற மற்றொரு நாடகத்தையும் எழுதி அரங்கேற்றினார் . அதுவரை வால்டேரை " ஒரு உதவாக் கரை " என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய தந்தையே , நாடகத்தைப்பார்த்துவிட்டு வால்டேரை வெகுவாகப் பாராட்டினார் . இவருடைய நாடகத்தை சில மதகுருமார்கள் வெறுத்தார்கள் , " ஒருவன் நாடகத் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொன்னாலன்றி அவனைப் புதைக்க , கல்லறையில் இடம் தருவதில்லை ; மதச் சடங்குகளும் இல்லை " என்று கூறினார்கள் . பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த நடிகை ஏட்ரியன் லெக் ரூவியா என்பவள் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலே கிடக்கிறாள் , அருகில் வால்டேர் நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.மத குருக்கள் வந்தார்கள் , தான் செய்த நடிப்புத்தொழிலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாலன்றி மதச் சடங்குகளோ , கல்லறையில் இடமோ கொடுக்க முடியாது என்று பயமுறுத்தினர் . என்றாலும் அவள் " என்னை ஆளாக்கி , பேரும் புகழும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த அந்தத் தொழிலுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விட்டாள் . சிறிது நேரத்தில் இறந்தும் போய்விட்டாள் , உறவினர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த பொழுது ,போலீஸ் புகுந்து தடியாலடித்து எல்லோரையும் விரட்டிவிட்டு பிணத்தை ஒரு குப்பை மேட்டில் போட்டு சுண்ணாம்புத் தண்ணீரை கொதிக்க கொதிக்க அந்த சடலத்தின் மேல் ஊற்றி அது பஞ்சுபஞ்சாகப் போகும் வரை தடியால் அடித்துவிட்டுப் போய்விட்டார்கள் .
இதைக் கண்ட பிறகு தான் வல்டேர் , இனி மதக் கொடுமைகளை ஒழித்தாலன்றி சமுதாயம் தன்மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார் .அவர் எழுதிய நாடகங்கள் நடிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களில் தடை போடப்படும் . காரணம் , முன்பு அந்த நடிகையின் மீது நடத்தப் பட்ட கோரக் கொடுமைக்குப் பிறகு , சமுதாய மூடவழக்கங்களைத் தாக்கி நாடகங்கள் அமைத்ததன் விளைவுதான்
.

முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம்,அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைகுறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்டஉற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டCandide-இன் விமர்சனம். - பாஸ்டன் பாலாஜி


Candide என்ற கதை எழுதுவதற்குக் காரணமாயிருந்தது லிஸ்பன் பூகம்பம் ,1756 நவம்பர் திங்களில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 30,000 பேர் உயிரிழந்தனர் ,கிருத்துவமதத்தின் முக்கியமான திருவிழாவான (All Saints Day) அன்று தான் இந்த பூகம்பம் நடந்தது . இதை ,லிஸ்பன் மக்கள் செய்த குற்றம் என்றனர் மத குருமார்கள் . அதை எதிர்த்து தீப்பொறி பறக்க ஒரு கவிதை எழுதி ,இது கடவுளின் குற்றம் என்று சுட்டிக் காட்டினார் வால்டேர் .


வால்டேர் கூர்மையான அறிவாளி. பிரபுக்களோடு அவருக்கு ஒருவிதமான love-hate relationship இருந்தது. பிரஷ்யா நாட்டுமன்னன் Federickக்குக்கும் அவருக்குமிடையே இருந்த நட்பை உதாரணமாகச் சொல்லலாம்.அதிகாரமும் செல்வாக்குமுடைய எல்லாரையும்போல பிரஷ்ய மன்னனுக்கு தான் கவிஞன் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.தன்னுடைய கவிதைகளை விருந்தாளியாக வந்திருந்த வால்டேரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.அரசனிடம் அவை பற்றிப் பாராட்டிக் கூறிவிட்டு, அவர் தம் நண்பனிடம் கூறியிருக்கிறார்:' The king has sent me his dirty linen to wash' - இந்திரா பார்த்தசாரதி

நோகன் பிரபு கலந்து கொண்ட ஒரு விருந்தில் வால்டேரும் கலந்து கொண்டு தன் நண்பர்களோடு உரக்கப் பேசிக் கொண்டிருந்தாராம் . " யார் அவன் ? நான் இருக்கிறேன் என்று தெரியாமல் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறான் " என்று நோகன்பிரபு கேட்டாராம் . உடனே வால்டேர் " பிரபு அவர்களே , ஏதோ குடும்ப கவுரத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான் " என்று சுடச் சுட பதிலளித்தாராம் . இதனால் ஆத்திரம் அடைந்த நோகன் பிரபு , ஆட்களை விட்டு அவரை நையப்புடைத்தாராம் . ஆனால் அப்போதும் , " வால்டேரை எங்கு வேண்டுமாலும் அடியுங்கள் , ஆனால் அவன் தலையில் மட்டும் அடிக்காதீர்கள் . ஏனென்றால் அந்தத் தலையிலிருந்து இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கிறது "என்று நோகன் பிரபு கூறினாராம்.

0

பிரஷ்ய நாட்டு மன்னன் ஆதரவில் சிறிது காலம் வாழ்ந்தார் வால்டேர் . அது சமயம் மன்னனிடம் சிலர் வால்டேரைத் துரத்திவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள் . அதற்கு பிரெடெரிக் மன்னன் " அதிகமாகப் போனால் வால்டேர் இன்னும் ஓராண்டு காலம் இங்கே இருக்க வேண்டியதிருக்கும் . அதன் பிறகு ஆரஞ்சுப்பழத்தை பிழிந்த உடன் தோலை எறிந்து விடுவதைப் போல் எறிந்து விடலாம்" என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி வால்டேருக்கும் எட்டியது.இருந்தாலும் இதைக் காட்டிக் கொள்ளாமல் , அறிந்து கொள்ளாதவர் போலே நடந்து கொண்டனர் .ஆனால் பகை மட்டும் வளர்ந்து கொண்டே போனது .

0

வால்டேர், என்னுடைய வணிகமெல்லாம் நான் நினைப்பதை மக்களுக்குச் சொல்வதுதான் என்று கூறினார் , (My trade is to say what I think ) . தனது தள்ளாத வயதிலும் (83) இரேனி(Irene) என்ற ஒரு நாடகத்தை எழுதி , அது நடிக்கப்படுவதைத் தானே உட்கார்ந்து பார்த்து விட்டு படுக்கையில் படுத்துவிட்டார் . மரணம் நெருங்குவதையும் அறிந்து கொண்டார்.இதையறிந்த ஒரு மத குரு வால்டேரின் அருகில் வந்து ,தங்களுக்கு ஆத்ம விடுதலை அளிக்க வந்திருக்கிறேன் எனறார் . உடனே வால்டர் அவரிடம் ," தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? " என்று கேட்டார் . அதற்கு அந்த மதகுரு நான் கடவுளிடமிருந்து நேராக வருகிறேன் என்றார் . உடனே வால்டேர் அதற்கான அத்தாட்சியைக் காட்டுங்கள் என்று கேட்டார் .மதகுரு தலை குனிந்த படியே திரும்பி விட்டார் .


0

மனித சுதந்திரத்தைப் பற்றி எழுதிய ரூஸோ, தம் வாழ்நாள் முழுவதும் ஒரு பணிப்பெண்ணுடன் இருந்தார். அவளுக்கு சிநேகிதி அல்லது மனைவி என்றஅந்தஸ்து தரவேயில்லை. அவர்காலத்திய அவர் நண்பர்கள் அவளை வேலைக்காரி என்றே நினைத்தார்கள். நம்முடைய இந்தக் காலத்திய 'புரட்சிச் சிந்தனையாளர்' களின் சொந்த வாழ்க்கையும் இப்படித்தான். - இந்திரா பார்த்தசாரதி

" மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பது மனிதனின் கடமை " என்று சொன்னவர் சாக்ரடீஸ் . மனிதர்கள் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள் , ஆனால் என்றும் தளைகளால் பூட்டப் பட்டிருக்கிறார்கள் " என்று சொன்னவர் ரூசோ( 1712-1778) ,மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு எழுத்துக்கள் என்ற வல்லமை மிக்க வெடிகுண்டுகளால் சமுதாய ஒப்பந்தம் (Socail Contract - 1762- Jean Jacques Rousseau ) என்ற நூலை ஆக்கித் தந்தவர் ரூசோ . ரூசோவின் இளமை அவ்வளவு சுவையுள்ளதாகவோ , மேன்மை பொருந்தியதாகவோ , பெண்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய இங்கிதம் நிறைந்ததாகவோ ,சிறந்த படிப்பாளி என்று சொல்லத்தக்க அளவிலோ இருந்ததில்லை . எந்த சீமாட்டியாவது இவனை விருந்துக்கு அழைத்தால் , உணவை சுவைப்பதை விட உணவிட்டவளின் அங்க அசைவுகளையே பார்த்துக் கொண்டிருப்பானாம் .இதை அவரே ஒப்புக் கொள்கிறார் . " நான் பதினைந்து , பதினாறு வயதிற்குள்ளாகவே கட்டுக்கடங்காத காமந்தகாரனாய்விட்டேன் " என்கிறான் ஓரிடத்தில். தன் இளம் வயதில் ரூசோ பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் பாரீஸ் நகரத் தெருக்களில் திரிய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார் .பிறகு சேவாய் நகரை அடைந்து பாண்ட் வீர் என்ற பாதிரியார் தயவில் அன்னெஸி நகரத்திலிருந்து , லாரண்ஸ் சீமாட்டியை அணுகி , பாதிரியார் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொடுத்து அங்கு தங்கியிருந்தார் . அப்போது ரூஸோவுக்கு வயது 15 ,அந்த சீமாட்டிக்கு வயது 28 , தன்மேல் கருணை காட்டிய அவள் காதல் காட்டமாட்டாளா என்று ஏங்கினார் . அதை அவள் புரிந்து கொள்ளவுமில்லை . இப்படியே அலைந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது .ஒரு பிரபுவின் தயவால் ஓர் உணவு விடுதியில் தங்க வேண்டி வந்தது .அங்கே தெரஸ் என்ற வேலைக்காரி பணிபுரிந்து வந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது , அழகானவள் ,அவளிடம் ரூசோ கொண்ட நட்பு, காதலாக மாறி அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார் . அந்தக் குழந்தைகள் ,சட்ட ரீதியான மனைவிக்குப் பிறக்காத காரணத்தால் , ஒரு அனாதை விடுதியில் விட்டுவிட்டார் . இவர் தான் பிளேட்டோ குழந்தைகளைப் பற்றி எழுதிய நூலைத் தழுவி (Emile) என்ற நூலை எழுதினார் .அதே ஆண்டு தான் (Social contrast) என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார் . ஒரு கட்டத்தில் ரூசோவை கிருஸ்துவின் துரோகி என்று சொல்லி எங்கு சென்றாலும் கல்லால் அடித்து விரட்டினார்கள் . ஆனால் இங்கிலாந்து மட்டும் இவரை அன்போடு அழைத்துக் கொண்டது ." காலத்தின் மேல் குற்றமில்லை . மக்கள் மனோ நிலை தான் காரணம் "என்று ஷேக்ஸ்பியர் கூறியது போல் நமது நினைப்பே காலத்தின் நிலைக்களனாய் அமைந்து விடுகிறது .

ஒரு காலத்தில் பாரீஸ் நகரத்து உயர் நீதி மன்றத்தின் முன்னால் தீயிட்டுக் கொழுத்தப் பட்ட சமுதாய ஒப்பந்தம் மற்றும் எமிலி ஆகிய நூல்களை உலக மக்கள் போற்றத் துவங்கியதைக் கண்டதும் , பிரான்சு நாடு ரூசோவை அழைத்துச் சிறப்பிக்கலாமா என்றெண்ணியது .ஆனால் ரூசோவின் மனத்தில் விழுந்திருந்த பழைய வடு மறையவில்லை.ஆதலால் , அவர் பிரான்சுக்கு செல்லவுமில்லை .இப்படி அண்டத்தையே கலக்கிய பேருருவமாய்த் திகழ்ந்த ரூசோ ,கிபி 1778 ஆம் ஆண்டு முகமெல்லாம் வீங்கி , தன் அறையில் மாண்டு கிடந்தார் .அவர் மரணத்தின் உண்மையான காரணம் மறைக்கப்பட்டு மருத்துவர்களும் ஊமையாக்கப் பட்டார்கள் .

ஓஷோவின் வெற்றுப்படகு என்ற புத்தகத்திலிருந்து....

சாக்ரடீஸ் மிகவும் ஆழமாக , ஒவ்வொன்றையும் மிகவும் நுண்ணியமாகத் தெரிந்துகொள்வதற்கான கேள்விகளைக் கேட்டு வந்தார் . இதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள மக்கள் கோபமடைந்தார்கள் . சாக்ரடீஸ் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் சாக்ரடீஸைக் கொன்றனர். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் சீனாவில் சுவாங்தஸ¤ வாழ்ந்து வந்தார் . சாக்ரடீஸ் , சுவாங்தஸ¤ வைச் சந்தித்திருந்தால், இந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பார் .

" யாரையும் முட்டாளாக்க முயற்சி செய்யாதே , ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை ,பைத்தியக் காரனிடம் அவன் பைத்தியம் என்பதை நிரூபிக்காதே , ஏனெனில்எந்தப் பைத்தியமும் அதை விரும்புவதில்லை , கோபமடைவான் , ஆத்திரமடைந்து உன்னைக்கொல்ல வருவான் , நீ அவனை விட உயர்ந்தவன் என்பது நிரூபிக்கப்பட்டால் , அவன் உடனே பழிவாங்கி விடுவான் . நீ முட்டாளாக இருப்பது நல்லது , அப்பொழுது மற்றவர்கள் உன்னைப் பார்த்து சந்தோசம் அடைவர். இந்த நுணுக்கமான வழிமுறை மூலம் நீ மற்றவர்களை மாற்ற முடியும் , பிறகு உனக்கு எதிராக அவர்கள் இருக்க மாட்டார்கள் ."

இதனால் தான் கீழை நாடுகளில் , முக்கியமாக இந்தியா , சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸை விஷமிட்டுக் கொன்றது போன்ற அசிங்கமான சமபவங்கள் நிகழவில்லை , இது ஜெருசலேமில் நிகழ்ந்தது - இயேசு சிலுவையில் அறையப்பட்டார் .இது ஈரானில் , எகிப்தில் மற்ற நாடுகளில் நிகழ்ந்தது - அனேக புத்திசாலிகள் கொல்லப்பட்டார்கள். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலோ , சீனாவிலோ ,ஜப்பானிலோ ஏற்படவில்லை . ஏனெனில் இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மக்கள் புத்திசாலியான மனிதனைப் போல் நடந்து கொள்வது பெருந்துன்பங்களை விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள் .
முட்டாளைப் போல , பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள் . இது தான் புத்தி சாலியின் முதல் படியாகும் , அப்பொழுது தான் நீங்கள் அவனைக் கண்டு பயப்படமாட்டீர்கள் . நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பீர்கள் .


0

Monday, June 13, 2005

எழுத்து சிற்றிதழ்


" நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் ... சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு " என்று புதுமைப்பித்தன் வேடிக்கையாகச் சொல்வாராம்.

0

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல் , புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் , 19-A பிள்ளையார் கோவில் தெரு , திருவல்லிக்கேணி , சென்னை - 5 என்ற முகவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது.


சென்னையில் வருடா வருடம் விநாயகர் சதூர்த்தியானது அதிவிமரிசையாக ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் . அது சமயம் , திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர்கள் , பிள்ளையார் சிலைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதன் பொருட்டே அந்தத் தெருவுக்கு பிள்ளையார் தெரு என்ற பெயர்வந்தது.


தட்டுத் தடுமாறி காலூன்றுவதற்கு முன்பே காலவாதியாகிவிட்ட சிற்றிதழ்கள் தமிழகத்தில் பல உண்டு . ஆயினும் எழுத்து இதழோ மிகுந்த சிரத்தைக்கிடையிலும் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வெளிவந்தது .

ஜனவரி 1959 - முதல் 1968 மார்ச் வரை எழுத்து ,மாத இதழாக வெளிவந்தது . (மொத்தம் 111 மாத இதழ்கள்) . 1968 (ஏப்ரல் - ஜூன்) முதல்1970 (ஜனவரி - மார்ச்) வரை காலாண்டிதழாக வெளிவந்தது (8 காலாண்டிதழ்கள்) ஆகமொத்தம் 119 இதழ்கள் வெளிவந்தன .


1959 , 1961 , 1963 ஆகிய மூன்று வருட எழுத்து இதழ்கள் என்னிடம் இருக்கின்றன. மெலிதான அட்டை . இதழின் பக்கங்கள் அனைத்தும் பூச்சிகள் அரித்து மஞ்சள் பூத்து மட்கிப் போய்விட்டன .ஒரு வருடத்து இதழ்கள் அனைத்தும் தொடர்ச்சியான பக்க எண்களுடன் அச்சிடப்பட்டிருக்கின்றன.


சென்ற வருட ஆனந்தவிகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் " எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை என்ற கட்டுரையில்சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார். எனினும் அந்தக் கட்டுரையில் எழுத்து இதழைப் பற்றி விரிவாக எழுதப்படவில்லை.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் . ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .


முதல் எழுத்து இதழில் (ஜனவரி 1959) ....

" முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒருசோதிக்கின்ற முயற்சிதான் . எழுத்து பற்றி பிரஸ்தாபித்த போது பலவாசகர்கள்,எழுத்தாளர்கள் , நண்பர்கள் , இத்தகைய அபிப்ராயத்தைத் தான் எதிரொலித்துச் சொன்னார்கள். தன் ரக வரிசையில் எழுத்து முதலாவதாக வருகிறது என்று நான் அடித்துச் சொல்ல வரவில்லை. கால் நூற்றாண்டுக்கு முன்பு "வ.ரா.மணிக்கொடி" இத்தகைய சோதனை முயற்சியாக அமைந்திடும் முன்பு பாலபாரதி , பஞ்சாமிர்தம் , பிரஜாநுகூலன் , போன்றவைகளும் பிறகு சுதந்திரச்சங்கு , சூறாவளி, தேனீ போன்றவைகளும் அதன்உடன் நிகழ்காலத்திலேயே கலைமகள் பத்திரிகையும் அதனதன் காலம்,சூழ்நிலைக்கேற்ப இலக்கிய சோதனை முயற்சிகளில் இறங்கியவை தான். அந்த மரபுவழியில் வரும் எழுத்து இன்றைய சூழ்நிலை , பரப்பு ,வீச்சு போக்குக்குத் தக்கபடி தன்னை உருவாக்கிக் கொண்டு வெளிவருகிறது என்பதைத் தான் குறித்துச் சொல்லத் தோன்றுகிறது ........................... "

இப்படியாக நான்கு பக்கத்திற்கு நீளும் தலையங்கத்தின் மூன்றாவது பக்கத்தை ஜெமினி & சாவித்ரி நடித்த கடன்வாங்கி கல்யாணம் என்ற படத்தின் விளம்பரம் ஆக்கிரமித்திருக்கிறது .


எழுத்து காலகட்டத்தில் இயங்கி வந்த சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்) , தாமரை(ப.ஜீவானந்தம்) , சரஸ்வதி (விஜயபாஸ்கரன்), போன்ற இதழ்கள் புதுக்கவிதையில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை .

எழுத்து இதழ் பல கவிஞர்களுக்கு ஒரு பயற்சிக்கூடமாக விளங்கியது.
கிராம ஊழியனில் வெளியான (1944) ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடைநாராயணன் என்ற இரண்டு பக்கக் கவிதை எழுத்து முதல் இதழில் மறுபிரசுரமானது. தி.சோ.வேணுகோபாலனின் முதல் புதுக்கவிதையான கவி-வேதனை என்ற கவிதை எழுத்து இரண்டாவது இதழில் (பிப்ரவரி - 1959) பிரசுரமானது . எழுத்து மூன்றாவது இதழில் (மார்ச் - 1959) , சுந்தரராமசாமியின் (பசுவய்யா) முதல் புதுக்கவிதையான உன் கை நகம் என்ற கவிதையும் , நகுலனின் (டி.கே துரைஸ்வாமி ) முதல்புதுக்கவிதையான கரத்தபானை என்ற கவிதையும் பிரசுரமாயின . எழுத்து நவம்பர்-1959 இதழில் சி.மணியின் (சி.பழனிச்சாமி) முதல் புதுக்கவிதையான முக்கோணம் என்ற கவிதை வெளிவந்தது . எழுத்து ( ஜனவரி 1960 ) இதழில் பிரமிளின் (தருமுசிவராமு ) முதல் புதுக்கவிதையான நான் என்ற கவிதை வெளியானது . எழுத்து ( நவம்பர்-1961 ) இதழில் வைத்தீஸ்வரனின் முதல் புதுக்கவிதையான கிணற்றில் விழுந்த நிலவுவெளியானது. எழுத்து - ஐந்தாவது இதழ் (மே - 1959) கு.ப.ராவின் நினைவுமலராக வெளியிடப்பட்டது . எழுத்து - ஏழாவது இதழ் (ஜூலை- 1959) புதுமைப்பித்தனின் நினைவுமலராக வெளியிடப்பட்டது.புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான தொ.மு.சி ரகுநாதன் திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற புனைபெயரில் எழுத்து இதழில் சில கவிதைகள் எழுதினார். புதுக்கவிதை பற்றி க.நா.சு, முருகையன் , சி.கனகசபாபதி ஆகியோர்கட்டுரைகள் எழுதி விவாதித்தனர்.எழுத்து கவிஞர்கள் சிலரின் கவிதைகள் தொகுக்கப்பட்டு புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.


சில ஆண்டுகளுக்குப் பின்பு புதுக்குரல்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனம் ஒன்றை சதங்கை சிற்றிதழ் நடத்திய பேராசிரியர் நா.வனமாமலை அவர்கள் தாமரை இதழில் (மார்ச் 1969) எழுதினார் .

"இவர்களது சோக ஓலங்களும் நம்பிக்கை வறட்சி ஒப்பாரிகளும் வாழ்க்கை மறுப்புப் பாடல்களும் நல்வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடும் மக்களுக்குச் சிறிதும் தேவையற்றவை. இவர்களுடைய புதுக்கவிதையில் புதுமையுமில்லை , கவிதைத் தன்மையுமில்லை புரட்சித் தன்மையுமில்லை . இவ்வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயந்து சாவை விரும்பும் பலவீன மனிதர்களின் கூக்குரல் தான் " -வனமாமலை


தமிழ்ப் புதுக்கவிதையில் சாதனை புரிந்த எழுத்து இதழ் 1970 ஆம் ஆண்டின் முதல் இதழோடு நின்றுவிட்டது . எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது. அவர் சொந்த ஊரான வத்தலக்குண்டுக்குத் திரும்பினார் , அங்கே இலக்கியம் பேசுவதற்குநண்பர்கள் யாரும் கிடைக்காததால் மீண்டும் சென்னை வந்தார். 18/12/1988 அன்று சென்னையில் சி.சு.செல்லப்பா காலமானார் .

0


எழுத்து ஆரம்பித்த சில வருடங்கள் கழித்து கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையே விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன . ஆகையால் எழுத்துவில் தன் பங்களிப்பை நிறுத்திக் கொண்ட க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார். செல்லப்பாவின் எழுத்து சிற்றிதழ் கொடுத்த உத்வேகத்தில் தான் கஸ்தூரிரங்கன் அவர்கள் கணையாழி இதழை ஆரம்பித்தார் .


0


"கவிதை முதலிய பலதுறைகளில் பழைய பஞ்சாங்களான பல அபிப்ராயங்கள் விடாப்பிடியாக மக்களின் மூளையைக் கவ்விக்கொண்டு கிடக்கின்றன . போர் , அநாகரீகம் என்று தெரிந்தும் உலகம் இன்னும் விட்டபாடில்லையோ அதைப் போலவே அரசாங்கம் , பொருளாதாரம் , கவிதை , கலை, சங்கீதம் முதலிய துறைகளில் துருப்பிடித்த கருத்துக்கள் சில இன்னும் வளைய வந்து கொண்டிருக்கின்றன . கவிதைக்குச் சில சொற்கள் தான் எடுப்பாக இருக்குமாம் ! கவிதைக்குச் சில விஷயங்கள் தான் பொருத்தமாம் ! கவிதையில் எதுகை மோனை இருக்க வேண்டுமாம் ! கவிதை சில விஷயங்களைப் பற்றிப் பேசவேகூடாதாம் ! கவிதை தேமாங்காய்,கூவிளங்காய் போன்ற பண்டைக் கூடுகளில் அடைத்தால் தான் அழகாக இருக்குமாம். கவிதை என்பது கடவுளைப் போல, கவிதைக்கு எல்லை கோலி வேலி அமைப்பது பாவமாகும் அது அறிவுடமையாகாது "(வ.ரா -எழுத்து ஆக்ஸ்ட் - 1963 )

0

ஒரு நண்பர் வீட்டில், புதுமைப்பித்தன் , ரகுநாதன் , நான் (கு.அழகிரிசாமி)இத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சின் நடுவிலே புதுமைப்பித்தன் சொன்னார் , " தமிழ்நாட்டில் இன்று யாருக்கு ஐயா கதை எழுத வருகிறது நம் மூன்று பேரைத் தவிர்த்து ......"

அரை நிமிஷம் மெளனமாக இருந்தார் ..

பிறகு கட கடவென்று சிரித்துக் கொண்டு " நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத் தான்சொல்லுகிறேன் , என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள் ? " என்று கேட்டார் .எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம் . " - அழகிரிசாமி - புதுமைப்பித்தன் நினைவு மலர்- எழுத்து ஜூலை 1959


0

பிரமிள் தனது அக உலகக் கலைஞர்கள் என்ற கட்டுரையில் (எழுத்து - டிசம்பர் 1961) ல.சா.ரா, மெளனி , புதுமைப்பித்தன் ஆகியோருடைய கதைகளைத் திறனாய்வு செய்திருக்கிறார். பிரமிள் இந்தக் கட்டுரையில் மூவரையும் ஒரே ஸ்தானத்தில் தான் வைத்துப் பார்த்திருக்கிறார்.
ஆனால் கு.அழகிரிசாமிக்கோ , ல.சா.ரா மற்றும் மவுனியின் கதைகளில் நல்லஅபிப்ராயம் இருந்ததில்லை .


" சிறுகதைகளை புதுமைப்பித்தனைப் போன்று உன்னதமான முறையில் புதுமையும் ,கனமும் , வேகமும் , தரமும் ஆழமும் , உருவமும் கொண்டவையாக வேறு யாரும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆசியாவிலேயே எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை . உலகம் முழுவதும் சிறுகதை இலக்கியத்தின் தந்தையர் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் என்று போற்றப்படும் மாப்ஸான்,செக்காவ் என்ற இரு எழுத்தாளர்கள்டு ஒன்றாக வைத்து எண்ணத்தக்க எழுத்தாளர் புதுமைப்பித்தன்..
என்ன எழுதுகிறோம் என்று தனக்கே தெரியாமல் , தனக்குத் தெரிந்தாலும் மற்றவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று எதையோ எழுதினால் எப்படி இருக்குமோ , பிரமாதமான விஷயம் உள்ளே அடங்கியிருப்பது போல பாவனை பண்ணுவதற்காக எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிற கதைகளுக்கு இந்த இருவருடைய (மெளனி , ல.சா.ரா) கதைகளையும் உதாரணமாகச் சொல்லத் தோன்றுகிறது இந்தக் கதைகளில் கருத்தாழமோ , இலக்கியச் சுவையோ எந்த ஒருவகை இலக்கியச் சிறப்புமோ அறவே இல்லை " - கு.அழகிரிசாமி


எனக்கும் உங்களைப் (மெளனி , ல.சா.ரா) போல கதை எழுதத்தெரியும் என்கின்ற தொனியில் புதுமைப்பித்தன் , மனக்குகை கதையை எழுதினார்.

0

இலக்கியப் பணி ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்துவது கஷ்டமென்பதை நிரூபித்தவர்கள் கு.பா.ராவும் ,புதுமைப் பித்தனுந்தான் . பதினைந்து ஆண்டுகள் எழுத்திலேயே கழித்து தீராத நோயையும் மாறாத வறுமையையுந்தான் சம்பாதித்தார் புதுமைப்பித்தன். இலக்கியம் பணக்காரர்களின் பொழுதுபோக்கு , இலக்கியத்தை நம்பி மட்டும் பொழுதுபோக்காகக் கொண்டால் அது அவனைக் கொன்று விடும் என்று அவர் சொல்வதுண்டு. அந்த இலக்கியமே அவரைக் கொன்று தீர்த்தது - கமலா புதுமைப்பித்தன்


0


எழுத்துக் கவிஞர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள்


1)சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டில் 1912 ஆம் ஆண்டு பிறந்தார் . சொந்த ஊர் சின்னமனூர் .கல்லூரியில் படித்த பொழுதே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் .தனது முழுவாழ்வையையும் இலக்கியத்தோடு கழித்தவர்.சி.சு.செல்லப்பா தனது 86 ஆவது வயதில் 18/12/1998 அன்று சென்னையில் சி.சு.செல்லப்பா காலமானார் .

சிறுகதைகள்:சரசாவின் பொம்மை,மணல் வீடு,சத்யாக்ரகி,அறுபது,கைதியின் கர்வம்,செய்தகணக்கு ,பந்தயம்,ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை, சி.சு.செல்லப்பா சிறுகதைகள் (7 தொகுதிகள் சிறுகதை)வடிவாசல் - குறுநாவல்
கவிதை :1)மாற்று இதயம் , 2) நீ இன்று இருந்தால்

கட்டுரை :தமிழில் சிறுகதை பிறக்கிறது,தமிழில் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம் , படைப்பிலக்கியம் , காற்று உள்ள போதே , ஏரிக்கரை , குறித்த நேரத்தில்,எல்லாம் தெரியும் , ஊதுபத்திப்புல் , மாயதச்சன், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி
நாவல்:1) ஜீவனாம்சம் , 2) சுதந்திரதாகம்

சுதந்திரதாகம் (சாகிதிய அகடாமி விருது பெற்றது)

2) ந.பிச்சமூர்த்தி

மணிக்கொடி இதழில் (1934) காதல் என்ற முதல் புதுக்கவிதையை எழுதிய ந.பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதை பிதாமகன் என்றழைக்கப்படுகிறார்.

"என் முயற்சிக்கு விட்மனின் புல்லிதழ் வித்திட்டது , அதைப் படித்த போது கவிதையின் ஊற்றுக் கண் தெரிந்தது . தொடர்ந்து பாரதியின் வசனகவிதை என்கருத்தை வலுவடையச் செய்தது , இவற்றின் நிறைவாக கவிதைகளை எழுதத்தொடங்கினேன் - என்று காட்டு வாத்து முன்னுரையில் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.

நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 15/08/1900 அன்று கும்பகோணத்தில் பிச்சமூர்த்தி பிறந்தார்.அவருடைய இயற்பெயர் வேங்கட மகாலிங்கம் . இவருக்கு முன்னாள் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் இறந்து விட்டதால் வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை , பிச்சை என்று இவருடைய பெற்றோற்கள் மாற்றி வைத்தார்கள் .பிச்சை , சுப்பு , குப்பு குப்பை என்று பெயர் வைத்தால் எமதர்மராஜன் இந்தஅற்பமான பெயர்கள் கொண்ட குழந்தைகளை அழைத்துச் செல்லமாட்டான் என்று ஒரு நம்பிக்கை . பிச்சமூர்த்தி அவர்கள் தனது எழுபத்தி ஆறாவது வயதில் 04-12-1976 அன்று காலமானார்.

பிச்சமூர்த்தியின் படைப்புகள்

சிறுகதைகள் : 1. பதினெட்டாம் பெருக்கு (2). ஜம்பரும் வேஷ்டியும் (3). மோஹினி (4). பிச்சமூர்த்தி கதைகள் (5). மாங்காய்த்தலை இரட்டை விளக்கு குடும்ப ரகசியம் (நாவல்) 8. காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) மேலும் பல நூல்கள்..


0

சிக்கலோ, டம்பமோ இல்லாத ஒரு எளிய நீரோட்டம் போல எளிதாக வழுக்கிச் செல்கிற நடையில் பிச்சமூர்த்தியின் கதைகள் , மனிதனுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து பார்த்த ஒரு முங்கு நீச்சுக்காரன் தரும் செய்திகளை கலையுருவ அழகின் தீய்ப்போடு மனசில் சூடு போடுகின்றன - வானமற்ற வெளி (பிரமிள்)


3) க.நா.சுப்ரமணியம்

கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்பிரமணியம் (க.நா.சு) 31/01/1912 அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தார் . தஞ்சாவூர் ,சிதம்பரம் , சென்னை , பெங்களூர் , மைசூர் , திருவனந்தபுரம் , புதுடில்லி ஆகிய நகரங்களில் வாழ்ந்திருக்கிறார் .16/12/1988 அன்று புதுடில்லியில் தன் மகள் வீட்டில் காலமானார்.


சூறாவளி , சந்திரோதயம் , இலக்கியவட்டம் ஆகிய சிற்றிதழ்களை நடத்திதன் வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே செலவிட்டார்.மயன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.


க.நா.சு. நாவல்கள் : சர்மாவின் உயில் , பசி , வாழ்வும் தாழ்வும் ,சக்தி விலாசம் , பொய்த்தேவு , ஏழுபேர் , ஒரு நாள் , அசுரகணம் புழுதித்தேர்,ஏழுமழை , வக்கீல் ஐயா , மால்தேடி , ஜாதிமுத்து , வாழ்ந்தவர் கெட்டால் , ஆயுள் தண்டனை , கந்தர்வ கோலத்தில் கொலை , நடுத்தெரு , திருஆலங்காடு,ஆட்கொல்லி, கோபுர வாசல் , சமூக சித்திரம் , அவரவர் பாடு


சிறுகதைத் தொகுப்புகள் : மணிக்கூண்டு, ஆடரங்கு , கருகாத மொட்டுவிமர்சனம் : விமர்சனக் கலை , படித்திருக்கிறீர்களா ? உலகத்துச் சிறந்த நாவல்கள் , முதல் ஐந்து தமிழ் நாவல்கள் , இலக்கிய விசாரம் ,இந்திய இலக்கியம் , பத்து சிறந்த இந்திய நாவல்கள்


மொழிபெயர்ப்பு : அன்புவழி (ஸ்வீடிஸ் நாவல் ) ,தபால்காரம் (பிரெஞ்சு நாவல்),மதகுரு(ஸ்வீடிஸ் நாவல் ) , நிலவளம் (நார்விஜி நாவல்) , மிருகங்கள் பண்ணை(ஆங்கில நாவல்கள்)


0

க.நா.சு வின் மிகச் சிறந்த ஆக்கம் பொய்த்தேவு தான், இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அ.மாதவையா , ராஜம் ஐய்யர் , வேதநாயகம் பிள்ளை ,ஆகியோரின் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள் வெறூம் முன்னோடி முயற்சிகள் மட்டுமே . நாவல் என்ற வடிவத்தை நோக்கி பிரக்ஞையுடன் எடுத்துவைக்கப்பட்ட முதல் எட்டு பொய்த்தேவு . ஆனாள் நாவலாசிரியருக்குத் தேவையான எதையும் நிகழ்த்தக் கூடிய புனைவு மொழி , விரிவான வாழ்க்கை அவதானிப்புகள்,புற உலகை நிகழ்த்தி காட்டும் திறன் ஆகியவை " பொய்த்தீவு " வில் இல்லைஎ ன்பதால் அது நாவலாக முழுமை பெறவில்லை - ஜெயமோகன்


4) பிரமிள்


அஜித்ராம் பிரமிள் - 20/04/1939 அன்று இலங்கையில் உள்ள திருகோணமலையில் பிறந்தார். தனது இருபது வயதிலேயே , தருமசிவராமு என்ற புனைபெயரில் கவிதைகளும் , கவிதைகள் குறித்த கட்டுரைகளையும் எழுத்து இதழில் எழுதத் தொடங்கினார்.
எழுபதுகளில் இவர் எழுதிய கட்டுரைகள் கசடதபற , அஃ , ஞானரதம் , சதங்கை , பிரக்ஞை, கொல்லிப்பாவை, லயம் மற்றும் மீறல் முதலிய பத்திரிகைகளில் பிரசுரமாயின -

பிரமிளின் கவிதைப்படைப்புகள் - கண்ணாடியுள்ளிருந்து , கைப்பிடியளவு கடல் , மேல்நோக்கிய பயணம்.

விமர்சனம் - விமரசன ஊழல்கள் , தமிழின் நவீனத்துவம் (எழுத்து கட்டுரைகள்)

கதை - லங்காபுரி ராஜா (இரு குறு நாவல்களும் இறு சிறுகதைகளும்) , ஆயி (குறுநாவல்) ,நட்சத்ரவாஸி (மூன்று நாடகங்கள் ) , படிமம் (இலக்கியத் தொகுப்பு) , சாது அப்பாதுரையின் தியானதாரா (சாது அப்பாதுரையின் வரலாறும் வாழ்வும்), ஸ்ரீலங்காவின் தேசிய தற்கொலை (சரித்திரம்)

0

நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா ·பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன் . நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமை கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது - பிரமிள் (மீறல் சிறப்பிதழ்)


5) வைத்தீஸ்வரன்

1935 ஆம் ஆண்டில் கோயம்பத்தூரில் பிறந்த கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் கல்லூரி மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்று , பின் சென்னையிலேயே குடியேறிவிட்டார் . இவர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமான அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.


எழுத்து , நடை , கணையாழி , கசடதபற , ஞானரதம் சதங்கை, கொல்லிப்பாவை ,நவீனவிருட்சம் , சுபமங்களா முதலிய இதழ்களில் இவர் கவிதை எழுதியுள்ளார்.


உதய நிழல் ( 1970 ) , நகரச்சுவர்கள் (1994) விரல் மீட்டிய மழை(1996)ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார் .இது தவிர வைத்தீஸ்வரன் கவிதைகள் என்ற தொகுப்பு நூலும் வெளிவந்திருக்கிறது.


6) தி.சோ.வேணுகோபாலன்

தி.சோ. வேணுகோபாலன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டதாரி. கோடைவயல் (1965) , மீட்சி விண்ணப்பம் (1977) ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார் . தி.சோ.வேணுகோபாலன் கேரளாவில் உள்ள அழகப்பாநகரில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக்கில் பேராசிரியாராகப் பணிபுரிந்திருக்கிறார் .


7) சி.மணி

ஆங்கில இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள சி.மணியின் இயற்பெயர் எஸ்.பழனிச்சாமி ஆங்கிலப் பேராசிரியப் பணிபுரிந்தவர். இவர் வே.மாலி என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார் . பல ஆங்கில ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் .வரும் போகும்(1974) , ஒளிச்சேர்க்கை (1976) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார்.


குறிப்பு நூல்கள்

1) எழுத்து , குமுதம் தீராநதி மற்றும் சில சிற்றிதழ்கள்

2) பிரமிள்- மீறல் சிறப்பிதழ்

3) தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

4) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

5) புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் - ந.வனமாமலை

6) புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன்

7) வானமற்ற வெளி - பிரமிள் கட்டுரைகள்

8) சொல் பொருள் மெளனம் - க.மோகனரங்கன்

9) சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

10) இலக்கிய முன்னோடி வரிசை - ஜெயமோகன்

11) இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) - அசோகமித்திரன்

12) கலாப்ரியா கவிதைகளில் அகத்திணை மரபுகள் - இரா .இராமகிருட்டிணன் .

13) இந்திய இலக்கியம்- க.நா.சு.

14) பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) - பெருமாள்முருகன்

15) தமிழ்ப் புதுக்கவிதைகளும் மொழியியற் சிந்தனைகளும் - ம.மதுசூதனன்

புத்தகங்கள் பிரபஞ்சத்தின் சாளரம் - மாக்ஸிம் கார்க்கி

Wednesday, June 08, 2005

இதுதாண்டா கவிதை

ஸ்தனதாயினி - ( கவிஞர் சுகுமாரன் )



இளகிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர் தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்

ஒன்றில் தாய்மையின் கசிவு
மற்றதில் காதலின் குழைவு

உன் இடது முலை பருகுகையில்
என் கண்களில்
குழந்தைமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடது முலை
பரிந்து சுரக்கும் ஊற்று

உன் வலது முலை பருகுகையில்
என் கண்களில்
காதலின் உற்சவம்
அப்போது உன் வலது முலை
நெகிழ்ந்து பெருகும் அருவி

குழந்தைமையும் காதலும் கனிந்த
மனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உண்ர்கின்றேன்
அமைதிக் கடலாய்
மூன்றாவது ஒரு முலை