Wednesday, October 05, 2005

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ




இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

0

இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேலை
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

0

அந்தக் காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
இந்தத் தோகைமயில் உறவுகளை நாடி
கொஞ்சத் துடித்திருக்கும் காதலனின் நாடி

0

எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளிக் கிள்ளி பறித்துக் கொண்ட பூவை
கை வில்லதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்

0

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ


போட்டி

மேலே இருப்பது ஒரு திரைப்படப் பாடல்

1) இந்தப் பாடலின் விஷேசம் என்ன ? (இலக்கியத்தனமான பதில் தேவை)
2) பாடலாசிரியர் யார் ?
3) பாடகர் யார் ?
4) திரைப்படத்தின் பெயர் என்ன ?

மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கும் முதலில் பதிலளிப்பவர்களுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.

பரிசுபெறுபவர் அயல்நாடுகளில் வசிக்கும் பட்சத்தில் , அவருடைய இந்திய நண்பர் யாருக்கேனும் புத்தகத்தை அனுப்பிவைக்கப் பரிந்துரைசெய்யவேண்டும்.


போட்டி முடிவு

1)இந்தப் பாடலின் விஷேசத்தன்மை என்ன ?
பதில் : சிலேடை அணி

இரண்டு வரிகளின் கடைசியிலும் ஒரே வார்த்தை வேறு அர்த்தங்கள் - கார்த்திக் ரமாஸ்
கார்த்திக் ரமாஸின் பதிலும் ஏற்கத்தக்கதே

0

மடக்கணி அல்லது ஒரு பொருள் பன்மொழி - பிரேம்

தண்டியலங்காரம் மடக்கணிக்கு என்ன இலக்கணம் சொல்லுதுன்னா ..

எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும் வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே

மடக்கணி என்ற பதில் ஓரளவுக்கு சரி மாதிரி தான் தெரியுது

ஒரு சொல் பன்மொழி (Homonym) என்பதை ஒரு பொருள் பன்மொழி
என்று எழுதியிருக்கிறீர்கள்

0

ஒரே சொல் வினைச் சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது - பாலராஜன் கீதா

இந்த பதிலையும் ஏற்றுக் கொள்ளலாம்

ஆர்வத்தோடு இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கார்த்திக் ரமாஸ் ,பிரேம் மற்றும் பாலராஜன்கீதா ஆகியோருக்கு தலா ஒரு புத்தகம் வழங்கப்படும்

2)பாடலாசிரியர் யார் ?
பதில் - வாலி
பரிசு பெறுபவர் - என் .சொக்கன்

3)பாடகர் யார் ?
பதில் - எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
பரிசு பெறுபவர் - குமரேஷன்

4) திரைப்படத்தின் பெயர் என்ன ?
பதில் தாம்பத்யம் ஒரு சங்கீதம்
மோகன் கதாநாயகனாக நடித்த படம்
பரிசு பெறுபவர் - என் .சொக்கன்

பரிசுப்புத்தகங்கள்

1) எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய சொல்லில் நனையும் காலம் - கலை இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

2)மீட்சி சிற்றிதழ் நடத்திவந்த பிரம்மராஜன் அவர்கள் எழுதிய நாடோடி மனம் - பல மேலை நாட்டுக் கவிஞர்களைப் பற்றிய குறிப்பும் , அவர்களுடைய கவிதைகளும் அடங்கிய நூல்.

3)ஓவிய ஆர்வலர் அரவக்கோன் அவர்களின் மனைவி மற்றும் பெண் கவிஞரான கிருஷாங்கினி அவர்கள் தொகுத்து வெளியிட்ட பறத்தல் அதன் சுதந்திரம் (கவிதைத் தொகுப்பு நூல் ) - இதில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்கவிஞர்கள் சிலருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன

4)அமெரிக்க வாழ் பெண் எழுத்தாளரான காஞ்சனா தாமோதரன் அவர்கள் எழுதிய பூமித்தின்னிகள் -பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

5) கலைவிமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதிய "கவிதை ஓவியம் சிற்பம் சினிமா" - கவிதை, ஓவியம் , சிற்பம் மற்றும் சினிமா குறித்தான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

6) பிரமிள் (தருமுசிவராமு) எழுதிய வானமற்ற வெளி -பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை குறித்து வெளியான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

மேலே உள்ள புத்தகங்களிருந்து ஏதேனும் ஒரு புத்தகம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் , என்.சொக்கன் இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதிலளித்திருப்பதால் அவருக்கு இரண்டு புத்தங்கள் வழங்கப்படும்.

மற்ற விபரங்களுக்குத் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்
maravantu@gmail.com

குலுக்கல் முறையில் யார் யாருக்கு எந்தப் புத்தகம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.


கார்த்திக் ரமாஸ் - வானமற்ற வெளி (பிரமிள்)

பிரேம் - கவிதை ஓவியம் சிற்பம் சினிமா (இந்திரன்)

குமரேஷ் - நாடோடி மனம் ( பிரம்மராஜன் )

பாலராஜன்கீதா - பறத்தல் அதன் சுதந்திரம் (கிருஷாங்கினி)

சொக்கன் - பூமித்தின்னிகள் (காஞ்சனா தாமோதரன்) & சொல்லில் நனையும் காலம் (எஸ்.வி.ராஜதுரை)




29 comments:

Anonymous said...

/1) இந்தப் பாடலின் விஷேசம் என்ன ? (இலக்கியத்தனமான பதில் தேவை)/
இரண்டு வரிகளின் கடைசியிலும் ஒரே வார்த்தை வேறு அர்த்தங்கள். ;-)

கருத்துச் சொன்னவரு: karthikramas

Anonymous said...

ஒரே சொல் வினைச் சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

கருத்துச் சொன்னவரு: பாலராஜன்கீதா

Anonymous said...

மடக்கணி அல்லது
ஒரு பொருள் பன்மொழி

கருத்துச் சொன்னவரு: prem

Anonymous said...

பாடலாசிரியர் வாலி, அதுமட்டும் நிச்சயமாத் தெரியும் :)

என். சொக்கன்,
பெங்களூர்

கருத்துச் சொன்னவரு: N. Chokkan

Anonymous said...

படம் பெயர் என் கலெக்ஷனில் தேடிப் பார்த்தேன் - 'தாம்பத்யம் ஒரு சங்கீதம்', கரெக்டா ? (எனக்கு நிச்சயமாகத் தெரியலை :)

என். சொக்கன்,
பெங்களுர்

கருத்துச் சொன்னவரு: N. Chokkan

Anonymous said...

பாடகர் - எஸ்.பி.பி.
மத்த கேள்விகளுக்குதான் மக்கள் பதில் சொல்லிட்டாங்களே !
எது சரி, தப்புன்னு சொல்லுங்க!

கருத்துச் சொன்னவரு: Kumaresan

Anonymous said...

1. அடுத்தடுத்த வரிகளில் கடைசிச் சீர் ஒரே சொல்லென்றாலும் சூழலுக்கேற்றவாறு வெவ்வேறு பொருள் கொண்டிருக்கிறது.

மற்ற மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரியாது ஏனெனில் சினிமா அறிவு போறாது (இலக்கிய அறிவும் தான் ஹிஹி)

மத்தபடி... நயந்தாராவுக்கு ஒரு கவிதை, அதுக்கொரு போட்டி! எல்லாம் நேரம்ப்பா.

கருத்துச் சொன்னவரு: சேதுக்கரசி

Anonymous said...

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கொள்கிறேன் , போட்டியின் முடிவை இந்தப் பதிவிலேயே சேர்த்திருக்கிறேன்

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

புத்தகப் பரிசு பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துச் சொன்னவரு: prakash

Anonymous said...

அட..இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுடுச்சே போட்டி..இப்பத்தான் நான் பதிவையே பார்த்தேன்.. ஆனா எனக்கு எந்த கேள்விக்குமே விடை தெரியாது.

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

கருத்துச் சொன்னவரு: Ramya Nageswaran

Anonymous said...

குலுக்கல் முறையில் யார் யாருக்கு எந்தப் புத்தகம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது
பதிவில் இந்த விபரத்தையும் சேர்த்துள்ளேன்

வாழ்த்துச் சொன்ன பிரகாஷிற்கும் , தாமதமாக வந்து எட்டிப்பார்த்த சேதுக்கரசி மற்றும் ரம்யாவிற்கும் எனது நன்றிகள் :-)

கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

இனி போட்டி வைப்பதாயின் பதிவின் தலைப்பிலேயே போட்டி என்று தெரியப்படுத்தினால் நன்று.

வெற்றிபெற்றவர்க்கும் பங்குபற்றியவர்க்கும் வாழ்த்துக்கள்.

கருத்துச் சொன்னவரு: கொழுவி

Anonymous said...

அன்புள்ள மரவண்டு, உங்கள் உயரியப் பரிசுக்கு நன்றி. எனக்கு இந்தியாவில் அட்ரஸ் வசதி இல்லாததால், அந்த புத்தகத்தை (பிரமிள் கவிதைகளாக இருப்பதால்) பிரகாஷிடம் அனுப்பக் கோருகிறேன். நன்றி.

கருத்துச் சொன்னவரு: karthikramas

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வீ. எம் said...

என்னங்க மரவண்டு, இவ்ளோ குறுகிய அவகாசத்துல போட்டி நடத்தி முடித்துட்டீங்க.. விடை எழுதலாம்னு வந்தா .. இப்படி போட்டு முடிவுனு போட்டுட்டீங்களே சார்

வீ. எம் said...

பரிசு பெறும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

ஏதோ அசின் படம் போட்டு போட்டி வைத்திருந்தா நாங்க கலந்து கொண்டிருந்திருப்போம்...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்

கருத்துச் சொன்னவரு: குழலி

Anonymous said...

நிறைய பேரு போட்டி சீக்கிரம் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படுற மாதிரி தெரியுது :-(
நான் இந்தப் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது கூட இதைப் போட்டியா அறிவிக்கப்
போறேன்னு எனக்கே தெரியாது , நயந்தாராவைப் பாத்துட்டே இருந்தேனா
அவங்க கட்டியிருக்குற ஊதாக் கலரு சேலையப் பாத்துட்டே இருந்தேனா
பட்டுன்னு ஊதாப்பூ பாட்டு ஞாபகம் வந்தது , சட்டுன்னு பதிவாப் போட்டுட்டேன் :-)

எனக்கென்னமோ இந்தப் போட்டி ரொம்ப சுளுவா இருந்து போச்சோன்னு தோணுது :-)
ஹ்ம் .. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அடுத்த போட்டி வைக்கிறேன்
இப்பவே சொல்லிடுறேன் அடுத்த போட்டி கொஞ்சம் கடினமா இருக்கும்
நிறைய கேள்விகள் இருக்கும் , நிறையே பேரு பங்கெடுத்துக்குற மாதிரியும் இருக்கும்

பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

நயன்தாராவை பார்த்து ஜொள்ளு விட்டதற்காக ஒரு '-' குத்து விட்டேன் :-)

இவன்
அகில உலக கனடா கொண்டார் அசின் ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவன்

கருத்துச் சொன்னவரு: குழலி

Anonymous said...

/ எனக்கு இந்தியாவில் அட்ரஸ் வசதி இல்லாததால், அந்த புத்தகத்தை
(பிரமிள் கவிதைகளாக இருப்பதால்)பிரகாஷிடம் அனுப்பக் கோருகிறேன். //

அன்புள்ள கார்த்திக் ரமாஸ்

"வானமற்ற வெளி" பிரமிள் கவிதைகள் அல்ல பிரமிள் கட்டுரைத் தொகுப்பு

சரி நீங்க சொன்ன மாதிரியே புத்தகத்தை பிரகாசுக்கே கொடுத்துடுறேன்

இன்னைக்கு காலையில் சொக்கனைச் சந்தித்து 2 புத்தகங்களையும் கொடுத்து விட்டேன்
சொக்கன் தான் எழுதிய மிட்டாய் கதைகள் (கலில்ஜிப்ரான் க(வி)தைகளின் மொழிபெயர்ப்பு)
என்ற புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.

பாலராஜன் சாரு , அவருடைய சென்னை முகவரியை எனக்கு அனுப்பியிருந்தார் ,
அவருக்கும் விரைவில் புத்தகம் (பறத்தல் அதன் சுதந்திரம்) அனுப்பிவைக்கப்படும்

"புத்தகத்தை நீங்களே வச்சிருங்க , இந்தியா வரச்ச வாங்கிக்குறேன்னு " குமரேஷ் சொல்லிட்டார்

பிரேம் என்பவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை , அவரைத் தெரிந்த நண்பர்கள்
யாரேனும் அவரிடம் விஷயத்தைச் சொல்லவும்



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

ஆஹா ... நான் பிரமிள் புஸ்தகத்தை படிச்சதே இல்லை. இந்த வழியா படிக்க ஒரு சந்தர்ப்பமா? நன்று... ரொம்ப நன்றி கார்த்திக் & மரவண்டு...

கருத்துச் சொன்னவரு: prakash

Anonymous said...

கணேஷ்,

இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன். போட்டி எல்லாம் வெச்சு புத்தகங்களை பரிசா கொடுத்து சுஜாதா ரேஞ்சுக்கு போயிட்டிங்க.. ம்.. நடத்துங்க. நடத்துங்க.

- Suresh Kannan

கருத்துச் சொன்னவரு: Suresh Kannan

Anonymous said...

சுரேஷ்

அடிக்கடி இந்தப் பக்கம் வந்து எட்டிப் பாத்துட்டுப் போங்க
அடுத்த பதிவில் உங்கள் கனவுக் கன்னி நமீதா :-) படம் போடுகிறேன்


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

//"வானமற்ற வெளி" பிரமிள் கவிதைகள் அல்ல பிரமிள் கட்டுரைத் தொகுப்பு//

ஓ அபடியா, பிரமிள் கவிதை மட்டும்தான் எழுதுவார்னு நினைச்சிருந்தேன் :-)

கருத்துச் சொன்னவரு: karthikramas

Anonymous said...

பிரமிள் ஆரம்ப காலத்துல ஒழுங்காத்தான் எழுதிட்டிருந்தாரு
அப்புறம் போகப் போக எல்லாத்தையும் திட்ட ஆட்ரம்பிச்சுட்டாரு



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

நமீதாவ மும்பை போகிறப்போ, ஜெட்
ஏர்வேஸ்ல பார்த்தேன். நெஜமாவே
ரொம்ப அழகா இருந்தா. நல்ல உயரம், சரியான எடை. சினிமால
பார்க்கிற ஓவர் வெயிட் எல்லாம் இல்லை.

கருத்துச் சொன்னவரு: ramachandranusha

Anonymous said...

உஷாஜி ,

நமீதா இப்பொ கொஞ்சம் உடம்ப குறைச்சிருக்காங்கலாம்
கும்குமம் புத்தகத்துல எழுதியிருந்தாங்க
ஆனால் நான் போடப் போற படத்தில் நல்லா பூசுனாப்புல
இருக்கும் :-)



கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

கணேஷ்,

புத்தகப்போட்டிக்கும், போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும், (இந்தப் போட்டிக்கு காரணகர்த்தா நயந்தாராவுக்கும்:) நன்றியும், பாரட்டுக்களும்...

இந்தப் பதிவை இன்றுதான் பார்த்தேன்... (முன்னாடியே பார்த்திருந்தா என்ன கிழிச்சிருப்பீங்கன்னு கேட்டா... அது டூ மச்!)




கருத்துச் சொன்னவரு: அன்பு

Anonymous said...

<<< (இந்தப் போட்டிக்கு காரணகர்த்தா நயந்தாராவுக்கும்:) நன்றியும், பாரட்டுக்களும்... >>

அன்புள்ள அன்பு

அடுத்த போட்டியின் காரணகர்த்தா நமீதா :-))




கருத்துச் சொன்னவரு: மரவண்டு