Monday, December 19, 2005

புத்தம் புதிய வீடு

மக்களே என்னோட புதுவீட்டை வந்துபாருங்க....

Monday, December 12, 2005

இனிய கானங்கள் (1)


படம் : தனியாத தாகம்

பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகி





Friday, December 09, 2005

ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்

கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?

பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்

0

வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு

வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் ! -( கவிஞர் ஜீவி )

0
ஒரு சின்னப்புள்ளை வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டு இருந்திச்சாம்,அது கிட்டத்துல வீட்டு வேலைக்காரி உட்காந்தமானக்கி பாத்துக்கிட்டே இருந்துச்சாம்.. உடனே அந்தச் சின்னப் புள்ளை " நீ எம்புட்டு படிச்சிருக்கன்னு " வேலைக்காரியக் கேட்டுச்சாம்.. உடனே அந்த வேலைக்காரி " எங்கம்மாலாம் என்னை பள்ளிக்கொடத்துல சேக்கலைன்னு" சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த சின்னப் புள்ளை உங்க அம்மா தான் " நல்ல அம்மா "ன்னு சொன்னிச்சாம்.

0

கவிஞர் வண்ணை சிவா , உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் அப்படின்னு ஒரு கவிதை தொகுப்பை வெளியிட்டாரு. எந்தக் குழந்தையுமே பொம்மைய உடைச்சதும் அழும் , அப்படி அழலேன்னா , அதுக்கு ஏதோ மூளைக் கோளாறுன்னு அர்த்தமாம்..

0



சில சின்னப்புள்ளைங்கள்ளாம் எதாச்சும் நினைச்சா சாதனையா கெடந்து அதை சாதிச்சுட்டுத்தான் மறுவேலை பாக்கும்.

இவன் எங்க அண்ணன் மவன் , ஸ்வஸ்திக் குமாரு . இவனை இங்கிலீஸ் மீடியத்துல சேத்துவிட்ட முத நாளுஸ்கூல் ஆரம்பிச்சு செத்த நேரத்துல , பைக்கட்ட தூக்கிட்டு விறுவிறுன்னு கிளம்பியிருக்கான் , ஏ எங்க போறன்னு மிஸ் கேட்டுருக்காங்க .. வீட்டுக்குப் போறேன்னு இவன் சொல்லியிருக்கான் , வீட்டுக்குலாம் போக முடியாது பெல் அடிச்சதுக்கப்புறம் தான் போகணும்னு மிஸ் சொல்லியிருக்காங்க ... அப்படின்னா பெல் அடிங்க ... நான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கான்.

0



அங்கே போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு
மேல ஏறாதே
பேசாம இரு
சத்தம் போடாத
தூங்கு சீக்கிரம்
தொண தொணண்ணு பேசாதே
இவற்றோடு
லேசான கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகளை
நம் உலகிற்கு அழைத்துக் கொள்ள - ( வெண்ணிலா )



குழந்தைங்களப் பத்தி வெண்ணிலா நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வெண்ணிலாவின் கணவர் மு.முருகேஷும் நல்ல கவிஞர் தான்,ஆனா நிறைய பேருக்கு அவரைத் தெரியாது .


0

குங்குமம் புத்தகத்துல சினிமாப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் , "பாலகாண்டம்" அப்படின்னு ஒரு தொடர் எழுதிட்டு வந்தார் ,மொத்தம் 15 வாரங்கள் வந்திச்சுஅவரோட சின்ன வயசுல நடந்த சம்பவங்களை ரொம்ப நல்லா சுவாரஸ்யமா எழுதியிருந்தாரு.

0

நான் சின்னோண்டா இருக்கும் போதுலாம் எனக்கு நிறைய சந்தேகம் வரும் .. நான் ஆறாப்பு படிக்கத்துல வரலாறு வகுப்புல பேபி டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க..... 1923 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 ஆம் நாள் அந்தப் போர் நடந்தது , டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் இந்தப் போர் நடந்ததுன்னு .. அவங்க பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனாங்க
உடனே நான் எந்திரிச்சி , "டீச்சர் எல்லாப் போரும் திங்கள் கிழமை அன்னைக்குதான் நடக்குமா?"ன்னு கேட்டேன் "
"திங்கள் என்பதற்கு இங்கே மாதம்னு அர்த்தம்"னு சொல்லி எனக்கு வெளங்க வச்சாங்க...

வீடு கட்டுறதுக்கு முன்னாடி அஸ்திவாரம் போடுறதுக்கு குழி தோண்டுவாங்க, அத கிராமத்துல வானம் தோண்டுறதுன்னு சொல்லுவாங்க , என்னடா இது "பூமியத் தோண்டிப்புட்டு வானம் தோண்டுறோம்"னு சொல்றாய்ங்கன்னு யோசிப்பேன் . இதே யோசனை இன்னொரு புத்திசாலிக்கும் வந்து அதை ஆனந்த விகடன் மதன் கிட்ட கேட்டடிருந்தாப்ல..அவர் அதுக்கு என்னமோ பதில் சொல்லியிருந்தாரு. சரியா ஞாபகம் இல்லை..ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசன்னான்னு ஒருத்தர் மதன்கிட்ட ஒரு கேள்வி கேட்டுருந்தார்..ஏன் சார் வாழப் பழத்தை கழுவாமலே சாப்புடுறோம்னு..அந்தக் கேள்விக்கும் மதன் பொறுமையா , வாழைப்பழத்தோலே அதுக்கு பாதுகாப்பா இருக்குறதுன்னால கழுவத் தேவையில்லைன்னு பதில் சொல்லியிருந்தாரு. பிடிச்சி மோலத் தெரியாத பய கூட இதுக்கு பதில் சொல்லிப்புடுவான் , இது ஒரு கேள்வின்னு அந்த ஆளு மெனக்கெட்டு , மதனுக்கு கடுதாசி போட்டுக் கேட்டுருக்காரு பாருங்க..

0

நான் அஞ்சு வயசிலேயே நீச்சல் கத்துக்கிட்டேன், தினமும் காலேல கிணத்துல தான் குளிப்பேன்.எங்க ஊரு கம்மாக்கரை ஓரமா ஒரு கிணறு இருக்கு , அந்த கிணத்துப் பக்கத்துல ஒரு பூவரசமரம் இருந்ததுனாலஅந்த கிணத்துக்கு பூவரசங்கிணறுன்னு பேரு , அப்ப பத்தாப்பு முழுப்பரிச்சை லீவு உட்டுருந்த சமயம் , வழக்கம் போல பூவரசங்கிணத்துல குளிச்சுட்டு இருந்தேன் , நல்லா அழுக்குத் தேய்ச்சு குளிக்கும் போதுநெஞ்சுல சின்ன கட்டி மாதிரி தட்டுப் பட்ட்டுச்சு, என்னடா இதுன்னு புடிச்சு நசுக்கிப் பாத்தேன் , வலிச்சது , அய்யய்யோ போச்சுடா இதை அறுத்துத் தான் எடுக்கணும் போலன்னு தலயக் கூட துவட்டாம வீட்டுக்கு விறுவிறுன்னு போயி எங்க அம்மா கிட்ட விசயத்தச் சொன்னேன் , எங்க அம்மா அங்க ஐயா கிட்ட சொன்னாங்க ...உடனே எங்க ஐயா எங்க அம்மாகிட்ட இருவது ரூவா கொடுத்து , " குமார செவாசில சந்திர கிரகம் டாக்டர் கிட்டபோயி காட்டிட்டு வாம்மா"ன்னு சொன்னாரு.

சிவகாசில சந்திரககிரகம் டாக்டரு நல்ல கைராசிக்காருன்னு சொல்லிக்குவாங்க , சீக்காளியப் பாத்தே அவனோட ஆயுசச் சொல்லிப்புடுவாரு.பயந்துக்கிட்டே எங்கம்மா கூட ஆஸ்பத்திரிக்குள்ள போனேன் .டாகடர் கிட்ட , எங்க அம்மா விபரத்த சொன்னாங்க .. டாக்டரு என்னைய சட்டையக் கழட்டிட்டு அந்த ரூமுல போயி படுன்னாரு ,உயரமான படுக்கையில மல்லாக்கப் படுத்த்திருந்தேன் , எங்கன வலிக்குதுன்னு டாக்டர் கேட்டாரு , இங்கனன்னு நெஞ்சைக் காட்டுனேன் , லேசா பிடிச்சுப் பாத்துட்டு சட்டையப் போட்டுக்கோ.. 2 மாத்திரை எழுதித் தாரேன்னார் , எனக்கு ஒன்னும் புரியலை , ரூமுக்கு வெளிய நின்னுக்கிட்டிருந்த எங்க அம்மா கிட்ட என்ன தெரியுமா சொன்னாரு , பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லேம்மா ,வேற டாக்டர் கிட்ட போயிருந்தேன்னா ..அறுக்கணும் வைக்கணும் ஒரு ஐயாயிரம் கொடும்பான் .. இது பயப்படுற மாதிரி ஒன்னும் கிடையாது , உன் மவன் வயசுக்கு வந்திருக்கான் . அவ்வளதான் "னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரு,வைத்தியம் பாக்குறதுக்கு வந்திருந்தவங்க எல்லாரும் என்னையே பாக்குறாங்க .அதுல காய்ச்சலுக்கோ வயித்துவலிக்கோ வைத்தியம் பாக்கவந்த ஒரு தாவணிப் பிள்ளை என்னைப் பாத்து நக்கலாச் சிரிக்கிது . எனக்குலாம் ஒரே வெட்கம் , என்னோட வலது கால் பெருவிரலால சிமெண்ட் தரையில் ஒரு வானவில்லையே வரைஞ்சுப்புட்டேன்... (இருங்கடே ஒரு டூயட் பாடிட்டு வந்துறேன் .. )

ஆஸ்பத்திரிக்கு எதுக்க இருக்குற மகாராஜா மெடிக்கல்ஸ்ல டாக்டரு
எழுதிக் கொடுத்த மாத்திரைய வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பிட்டோம் ,
எங்க அம்மா , எங்க ஐயா கிட்ட விசயத்த சொல்லிட்டாங்க . எங்க ஐயா என்னைய கூப்பிட்டு , " எலே குமாரு இனிமேலு நீ டவுசர்லாம் போடக்கூடாது , ஐயா செவாசில இருந்து கைலி வாங்கிட்டு வர்ரேன் , இனிமேல் நீ கைலிதான் கட்டணும்னு சொல்லிட்டாரு..ஹ்ம் ... நான் வயசுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி .. அப்பிடி இப்பிடி நடக்குறதுக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்காததுனால இதுநாள் வரைக்கும் நான் ஒரு கற்புக்கரசனாத்தான் வாழ்ந்த்துக்கிட்டு இருக்கேன் :-)

0

முனீஸ்வரன் , இவன் என்னோட வகுப்புத் தோழன் , நெருங்கிய நண்பன்.குழப்பமான நேரத்துல இவங்கிட்டதான் நான் யோசனை கேட்பேன்.ஒரு நாள் இவன் கிட்ட " கல்யாணம் முடிக்காம இருந்துடலாமான்னு யோசிட்டுருக்கேன்னு" சொன்னேன்...
அதுக்கு அவன் "ரொம்ப கஷ்டம்டா , வயசான காலத்துல உன் கூடவே இருந்து நீ சொல்றதையெல்லாம் கேக்குறதுக்கு ஒரு ஆளு வேணும்,அப்படி ஒரு ஆளு வேணும்னா கண்டிப்பா நீ கல்யாணம் முடிச்சுதான் ஆவணும்"னு சொன்னான்.அவன் சொல்றதும் சரிதான்னு படுது. ஹ்ம்... எனக்குன்னு வாய்ச்சிருக்கவ இந்நேரம் எங்க இருக்காளோ .. என்ன செஞ்சிட்டு இருக்காளோ ...

0

போட்டி

கேள்வி எண் 1 : இவர் ஒரு நவீன தமிழ் இலக்கியவாதி இவருடைய இயற்பெயர் இளங்கோ. இவருடைய புனைபெயர் என்ன ?

கேள்வி எண் 2 : இது ஒரு நான்கெழுத்து தமிழ்த் திரைப்படம் , (பாடல்களுக்காகவே இந்தப் படத்தை நான் ஐந்து முறை பார்த்தேன்)இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்தப் படத்தின் இயக்குநர் , கதாநாயகிக்கு ஒரு பொக்கே கொடுத்துவிட்டுப் போவார்.இந்தப் படத்தின் பெயர் என்ன ?

சரியான பதில் அளிப்பவர்களுக்கு வழக்கம் போல ஒரு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.